அடுத்து யாருக்கு படையலும், குளுத்தியும் வைக்கலாம்…

637

ஒரு பேப்பருக்காக
சுகி

ஜயகோ.. எங்களை இப்படி வேரறுத்து ஒன்றுமே இல்லாமல் ஆக்கிவிட்டார்களே..இனி என்ன செய்வது… எவ்வளவு கோபம் இருந்தால் இப்படி செய்திருப்பார்கள்..இதற்கெல்லாம் காரணம்..இருபது வருடங்களுக்கு முன் இந்தியாவிற்கு கொடுத்த அடிதான்  (கொடுத்திருக்கா விட்டால் தமிழரின் பிரச்சனை உலகிற்கு தெரியமுன்பே முளையிலேயே அழித்திருப்பார்கள் என்பது வேறு கதை) அதனால் அவர்கள் மிகவும் கோபமாக உள்ளார்கள். எனவே அவர்களின் வாரிசுகளுக்கு, நாம் குளுத்தி வைக்க வேண்டும். அவர்களை மீண்டும் கோபம் படுத்தாமல் அவர்கள் அநுசரித்து நடந்து தமிழ் பிரதேசத்தில் அவர்கள் சுரண்ட நினைப்பதை சுரண்டியபின், கிடைப்பதை வைத்துக்கொண்டு நல்ல பிள்ளைகளாக இருக்கவேண்டும் என்று ஒருசாராரும்,

மற்றெரு சாரார், அமெரிக்கா, பெரியபிரித்தானியா போன்ற வல்லரசுவுகள் பெரிய மனது பண்ணி எப்போதாவது விடுதலை தரும் போது நாம் இருகரம் நீட்டி வேண்டிக்கொண்டால் போதுமானது. அது மட்டும், அவர்களுக்கு எதோ காரணத்தால் (என்ன காரணம் என்றும் அறுதியாக எவர்களுக்கு தெரியாது) எங்களின் போராட்டத்தை நசுக்கியதால், இனி போராட்டம், தமிழீழம் என்றெல்லாம் கதைப்பதோ, அல்லது அதன் குறியீடுகளாக உலகளாவிய ரீதியில் அறியப்பட்ட சின்னங்கள், கொடிகள் எல்லாவற்றை பிடித்து அவர்களின் கோபத்திற்கு மீண்டும் ஆளாவதோ இல்லாமல், அடிபெட்டிக்குள் வைத்து விட்டு, வேண்டுமென்றால் இங்குள்ள (தமிழர்கள் மட்டுமே வரும்) கோயிலில், தாயகத்தில் உள்ள மக்களுக்காக (போக்குவரத்துக்கு இடைஞ்சல் விளைவிக்காது, பல்லின மக்களுக்கும் தெரியாத வகையில், தமிழ் இணைத்தளங்களில் மட்டும் படங்கள் தாரளமாக வரக்கூடிய வகையில்) சாந்தி பூசைகள், யாகங்கள் மற்றும் கூட்டுப்பிராத்தனை போன்றவற்றில் ஈடுபடுவது, அவ்வல்லரசுகளுக்கு நல்ல படையல் வைப்பது போன்றது.

வல்லரசுகளை பகைத்துக்கொண்டு நாம் என்ன செய்யப்போகிறோம்? நல்ல கேள்வி, அதே நேரம் காலடியில் போய்நின்று பாதபூசை செய்து கொண்டிருப்போமேயானால், எங்களோடு கதைக்க வேண்டிய தேவையும் அவர்களுக்கு இல்லாமல் போகிறது அல்லவா. காலை நக்கிக்கொண்டிருப்பவர்களை, யாராவது தட்டி எழுப்பி கதிரையில் இருத்தி, உங்களுக்கு என்ன பிரச்சனை என்று கேட்டு, தீர்த்து வைப்பதற்கு என்ன அவசியம் இருக்கிறது. கொடுக்காவிட்டாலும் என்ன, காலை நக்குவது என்ன, குறையவா போகிறது?

ஒரு நாட்டுக்கும் பறந்து திரியாமல், ஒருவருடனும் தொலைபேசியில் அளவளவாத, எங்கையே ஒரு உலகப்படத்தில் புள்ளி போல இருக்கும் நாட்டின் காட்டுக்குள் தனது மக்களும், அவர்களுக்கான போராட்டமும் என்று இருந்த, எமது தேசிய தலைவனை காண, ஆளுக்கு மேல் ஆள் என, நாட்டுக்கு மேல் நாடு எனச் சொல்லப்பட்டவர்களும், அவர்களின் தூதுவர்களும் போய் சந்தித்தற்கு காரணம் என்ன?

மில்லியன் கணக்கில் அவர்களின் புலன்ஆய்வுத்துறைக்கு செலவழித்து, எமது விடுதலை இயக்கத்தின் பலம் என்ன? பல்லாயிரக்கணக்கான, வேறுவேறு நாடுகளில், ஒருவருக்கு ஒருவர் தொடர்புகள் கூட அதிகம் இன்றி, வாழும் ஈழத்தமிழ் மக்கள், வாழ்க்கையில் ஒருதடவை கூட சந்தித்திராத, மறைமுகமாக வாழும், ஒருவரின் பெயரை சொன்னதும், தெருவில் இறங்குகிறார், பல லட்சம் பேர், ஒரு தொலைபேசி குறும் செய்தியில், கேள்வியின்றி அணிவகுக்கிறார்;கள், அந்த கொடியை பார்த்துமே விடுதலை உணர்வும், தியாகமும், தன்மானமும், தூய்மை, தன்னலமின்மை என்ன பல் உணர்ச்சிகளோடு தமிழன் என்ற உணர்;வில் ஒருமிக்கிறார்கள், என்ன அதிசயம், இது எப்பிடி சாத்திமாகிறது. படித்தவர்கள், படிக்காதவர்கள், பணத்தில் புரள்பவர்கள், ஒருநாள் கூலிக்கு வேலை செய்பவர்கள், தமிழ்ஈழத்தில் பிறந்தவர்கள், சிறீலங்காவில் கூட கால் பதிக்காத இங்கு பிறந்த அடுத்த தலைமுறை, முதியவர்கள், இளைஞர்கள், ஏன் சிறுவர்கள் என எல்லோரும் இணைவதுவும், ஒரு கொடியின் கீழ் நிற்பதுவும், நடப்பதுவும் எப்பிடி சாத்தியமாகின்றது இந்த சிறிய பகுதி மக்களால், என அதிசயத்தார்கள், ஆச்சரியப்பட்டார்கள், எல்லாவற்றுக்கும் மேலாக எந்த விலை கொடுத்தும் வாங்கமுடியாத கொள்கைபற்றை பார்த்து, பயந்தார்கள்.

விடுதலை அடையமுதலே இருக்கும் அரசியல்,பொருளாதார, இராணுவக்கட்டமைப்புகள், வெடிபொருள், கணிணி, இலத்திரனியல் தொழில்பிரிவு, போர்கருவி தொழிற்சாலை, இராணுவ விஞ்ஞான கல்லூரி, பரப்புரை பிரிவு, பொறியியல் துறை, விளையாட்டுத்துறை, ஆங்கில கல்லூரி, திரைப்படபுத்தக மொழிபெயர்ப்புத்துறை, கல்வி மேம்பாட்டு கழகம், கலை பண்பாட்டு கழகம், சுகாதாரப்பபிரிவு, சூழல் நல்லாட்சி ஆணையம், வனவள பாதுகாப்புப் பிரிவு, பொருண்மிய மேம்பாட்டு நிறுவனம், பொருண்மிய மதியுரைகம், காலநிலை அவதானிப்பு நிலையம், ஒளிக்கலைப்பிரிவு என ஜம்பத்தாறு வகையான பிரிவுகளால் எதிர்காலத்தை திடமாக திட்டமிட்டு நடத்தியதோடு போரும் புரித்தார்கள். அவர்கள் கதிரைக்கு ஆசையுள்ளவர்களாகவோ, மதிநுட்பம் இல்லாது, தன்னிறைவை நோக்கிய தூர நோக்கில்லாதவர்களாக இருந்திருந்தால், நாடுகடந்த அரசை வளர்த்தெடுத்தது போல அவர்களையும் வளர்த்தெடுத்து தாங்கள் சொல்லும் போது வாலாட்டுவதற்;கெனவும், மக்கள்சக்தியை இரண்டாக உடைப்பதற்கெனவும் வைத்திருந்திருப்பார்கள். கருணாவை கொண்டு உள்ளாட்டிலும், வெளிநாட்டில் கேபி போன்றவர்களிலும் கண்வைத்தார்கள். வெளிநாட்டு அரசாங்களுக்கு நாங்கள் அச்சுறுத்தலாக இல்லாதபோதும் எமது உறுதியையும், மக்கள் பலத்தையும், ஒருகுறியீடு ஓருகொடி என அவர்களைக்போல பகுத்தறிவுள்ள, தேசியபற்றுள்ள இனமாக உள்ளதைப் பார்த்து பயந்தார்கள். இதை அழித்து விட்டு, கொஞ்சம் அறிவு குறைந்த, பதவி பட்டம் என ஆசைகள் உள்ள, தமக்கு அச்சுறுத்தலாக இல்லாத ஒன்றை கொண்டுவர எண்ணினார்கள்.

சில பயணங்களுக்கு ஒருவழி பாதை (one way) மட்டுதான். அதில் பயணம் செய்தால், சேரும் இடம் வரும் வரை பயணம் செய்து கொண்டிருக்க வேண்டும், இடையில் திரும்பமுடியாது, ஏனெனில் அது போவதற்கு மட்டும் உரிய பாதை. விடுதலையை நோக்கிய பாதையும் அப்படித்தான். கிணறு தோண்டும் போது தண்ணி வருவது நிச்சயம், ஆனால் வருவதற்கு ஒரு அடிக்கு முன்னும் நாம் களைத்துப்போய் நிற்பாட்டி விடலாம். ஆனால் எம்மை தோண்டுவதற்கு உந்துசந்தியாக இருக்கும் சிங்கள பேரினவாதம் எம்மை நிற்கவிடாது. ஓன்றுமே இல்லாத வெளி நாட்டில், பயங்கரவாதம் என்று பயப்படுகிறார், உன்னுடைய மனைவியை அடுத்தவன் நடந்தை கெட்டவள் என்று சொன்னால், உடனே நீங்கள் தள்ளிவைத்து விடுவீர்களா? சொந்த புத்தி வேண்டாம். அவ்வளவு அடக்கமுறைக்குள்ளும் அங்குள்ள மக்கள் இந்த வெளிநாட்டில் இருக்கும் வியாக்கியானம் கதைப்பவர்களின் தங்கியிருக்காது, அங்கு நடந்து கொண்டிருக்கும் அடக்குமுறைக்கெதிராக உயிரையும் துச்சமாக மதித்து குரல் கொடுக்கிறார்கள். அடக்குமுறையால் போராட்டம் வந்ததா? போராட்டம் இருப்பதால் அடக்கு முறை வந்ததா? சீறிலங்கா அரசின் நடவடிக்கைகளுக்கு சாமரம் வீசுபவர்களே கொஞ்சம் சிந்தியுங்கள், சிங்கள மக்களும் கூட தலைமுறையை போருக்கு அடகு வைக்காமல் சிந்திக்கும் நேரமிது.

வாழ்க சிங்கள பேரின அடக்கு வாதம்! வளர்க தமிழ் ஈழம்!!