அனைத்துலகச் செயலகம் VS தலைமைச்செயலகம், அடுத்தது என்ன??

612

சாத்திரி


ஒரு பேப்பர்

இந்த வருடம் மாவீரர் தினம் ஜரோப்பாவிலை பெரும்பாலான நாடுகளிலை அனைத்துலகம் தலைமைச்செயலகம் இரண்டு பிரிவாக இரண்டுமே வேறு வேறு அமைப்பின் செயலகங்கள் என்பதைப்போல போட்டி போட்டு ஒரு மாதிரி நடந்தேறிவிட்டது. யாராக இருந்தாலும் ஒரே இடத்தில் ஒற்றுமையாக மாவீரர்களை நினைவு கூரவேண்டும் என்பதே பலரினதும் ஒரு பேப்பர் குழுமத்தினரதும் அங்கலாய்ப்பாக இருந்தது ஒரு பேப்பர் குழுமமும் அதனைத்தான் வலியுறுத்தியிருந்தோம்.

ஆனால் சம்பந்தப் பட்டவர்கள் அடம்பிடித்ததனால் யாருடைய நிகழ்வெள்றாலும் பரவாயில்லை மாவீரர்களை நினைவு கூரவேண்டியது எமது கடைமையென்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து இடங்களிலும் கலந்து கொண்டிருந்தனர். மாவீரர் தினத்தன்று பெரும் அசம்பாவிதங்கள் எதுவும் நடக்கலாமென பொதுவானதொரு அச்சம் இருந்திருந்ததும் உண்மை ஆனால் சிறு சிறு அசம்பாவிதங்கள் மட்டுமே சில நாடுகளில் நடந்ததோடு மாவீரர் வாரம் முடிவடைந்தது . அந்தளவிற்காவது இரு குழுவினரும் மாவீரர்களை மதித்தது மகிழ்ச்சியே.

ஆனால் நாங்கள் தூய்மையானவர்கள்.கணக்குவழக்கு சரியாக காட்டுவோம் என்றபடி புதிதாகப் புறப்பட்ட தலைமைச்செயலகத்தினர் நடாத்திய நிகழ்வுகளை விட வழைமைபோல வருடாவருடம் இந்நிகழ்விலிருந்து காசு பார்த்த அனைத்துலகச் செயலக்தின் நிகழ்வுகளிலேயே மக்கள் அதிகளவு கலந்து கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத் தக்கது. அதற்கு காரணம். தலைமைச்செயலகத்தினரிடம் ஒரு பேப்பர் எழுப்பியிருந்த சந்தேகங்களே பலரது மனங்களிலும் இருந்திருக்கின்றது. அதே நேரம் இவர்கள் பிரிந்து நின்று அடிபட்டாலும் நாம் மாவீரர்களை பிரிக்கக்கூடாது என்கிற காரணத்திற்காகவும். புதிதாக வந்தவர்கள் அப்படி என்னதான் செய்கிறார் பார்க்கலாமென விடுப்புப் பார்ப்பதற்கெனவும். கடந்தகாலத்தில் அனைத்துலகச் செலயக்கத்தில் உள்ள சிலரின் நிதி மோசடிகளால் பாதிக்கப் பட்டவர்களும், தனிப்படட குரோதங்களால் விலகி நின்றவர்களுமே தலைமைச்செயலகத்தின் நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தனர்.

மாவீரர் தினம் முடிவடைந்ததும் தலைமைச்செயலகம் நட்டக் கணக்கு காட்டினார்கள். இலண்டனில் இவர்கள் காட்டிய நட்டமோ இருபத்து மூவாயிரம் பவுண்சுகள். இதனை யார், எப்படி ஈடுகட்டப் போகிறார்கள் என்பது பற்றிய எந்த விபரமும் கிடையாது. அனைத்துலகச் செயலகம் இதுவரை கணக்குக் காட்டவில்லை. கேட்ட சிலருக்கு அவர்கள் சாதாரணமாக ஒரு பதிலை சொல்லியிருந்தனர் அது பார்த்தீர்களா புதிதாய் நிகழ்வு செய்தவர்களே நட்டக்கணக்கு காட்டுகிறார்கள். நாங்கள் இதைத்தானே வருடாவருடம் சொல்லுறம் எங்களிற்கும் நட்டம்தான்.

கணக்கு வழக்கு விடையங்களை விட்டுவிடுவோம். காரணம் மாவீரர்கள் வருடாவருடம் நினைவுகூரப்படவேண்டும். மக்களின் பங்களிப்பும் தொடர்ந்து இருக்கவேண்டும். இந்த இரு அமைப்பும் மாவீரர் தினத்தை கொண்டாடுவதற்காக எப்படி மோதிக்கொண்டார்களோ, வானொலி தொலைக்காட்சி இணையங்களில் எப்படி மாறி மாறி குற்றச்சாட்டுக்களை வைத்தார்களோ அதே போல இனிவரும் காலங்களில் இலங்கையரசின் போர் குற்றங்களை வெளிக்கொண்டு வருவதிலும் போட்டி போட்டுக்கொண்டு செயறப்படவேண்டும். சம்பந்தப் பட்டவர்கள் மீது வழக்கு தொடரவேண்டும். சர்வதேச நீதி மன்றத்தில் அவர்களை நிறுத்தவேண்டும். யுத்தத்தில் பாதிப்படைந்த மக்களிற்கு உதவிகள் புரிந்தது போதாது என்று ஒருவரையொருவர் குற்றம் சாட்டியபடியே அந்த மக்களிற்கான உதவிகளை செய்யவேண்டும். இதுபற்றிய போட்டி விவாதங்களை நடாத்தவதற்கு ஊடகங்கள் தயாராக வேண்டும்.

மக்களிற்கு கிடைத்த உதவிகளில் போர் குற்றம் தொடர்பான விடயங்களில் ஒருகுழு விட்ட தவறை மற்றைய குழு இணையங்களிலும், பத்திரிகைகளிலும் பகிரங்கமாக சுட்டிக்காட்டி விவாதிக்கவேண்டும். அதற்கும் ஒரு படி மேலே போய் இரண்டு தரப்பிலுமே அடுத்த போர் வெடிக்கும் தமிழீழமே தீர்வு என இணையங்களில் ஈழத்திற்கான இணையப் புரட்சி செய்யும் இளைஞர்கள் போரினால் பாதிப்படைந்து இன்று தங்கள் சமூகத்தாலும் சொந்த உறவுகளாலும் கைவிடப்பட்டு எந்த உதவிகளுமற்று ஏதிலிகளாகி வாழ்க்கையின் விரக்தியின் விளிம்பில் பலநூறு முன்னைநாள் பெண் போராளிகள் இருக்கின்றார்கள். இவர்களது வாழ்வின் ஆதாரங்களாக மாறி அவர்களின் வாழ்விற்கும் ஒரு அர்த்தத்தினை கொடுக்கலாம். அது முடியாதவர்கள் அவர்களின் வாழ்வாதாரத்திற்காவது ஏதாவது வழிவகைகளை செய்யது கொடுக்கலாம்.

இவற்றையெல்லாம் விட்டுவிட்டு மீண்டும் மீண்டும் மாவீரர் தினதை கொண்டாடவும். மாவீரர்களின் நினைவுநாளை கொண்டாடவும். கோடை தொடங்கியதும் விளையாட்டு போட்டியை நடாத்த மட்டுமே இவர்கள் போட்டிபோட்டு அடிபட்டுக்கொண்டு நட்டக்கணக்கை காட்டிக்கொண்டேயிருப்பார்களாயின் இவர்களை ஒரு தலைவர் பிரபாகரன் என்ன ஆயிரம் தலைவர் பிரபாகரன்கள் வந்தாலும் இவர்களை திருத்தமுடியாது.

அதே நேரம் நாடு கடந்த அரசு என்பது வெறும் நாட்கள் கடத்தும் அரசாக மாறிக்கொண்டிருக்கின்றது. நாட்கள் கடத்தும் அரசு பற்றிய பதிவொன்றுடன் அடுத்த பேப்பரில் சந்திக்கின்றேன்

நன்றி வணக்கம்