நல்லாட்சியின் பெயரில் கபட நாடகமாடி உலகைத் தனது பக்கம் வளைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் மைத்திரி-ரணில் அரசாங்கத்தின் முகத்திரையைக் கிழித்தெறியும் அரசியல் நடவடிக்கைகளை வீச்சாக்குவதற்கு தேசத்தின் குரல் கலாநிதி அன்ரன் பாலசிங்கம் அவர்களின் பத்தாம் ஆண்டு நினைவு நாளில் பிரித்தானியத் தமிழர்கள் திடசங்கற்பம் பூண்டுள்ளனர்.
இதற்கான அரசறிவியல் ஆய்வரங்கம் இன்று (14.12.2016) புதன்கிழமை இலண்டன் Rayners Lane பகுதியில் நடைபெற்றது.
அரசறிவியலாளர் கலாநிதி ர.சிறீஸ்கந்தராஜாவின் தலைமையில் நடைபெற்ற ஆய்வரங்கில் முதலாவது அமர்வாக பாலா அண்ணையிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினைகள் பற்றிய கருத்தாடல் நடைபெற்றது.
இதன்பொழுது முதன்மை உரைகளை மூத்த போராட்டவாதியும், அரசியல் விமர்சகருமான ச.ச.முத்து, தமிழர் ஒருங்கணைப்புக் குழுவின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் கோபி சிவந்தன் ஆகியோர் ஆற்றினர்.
கருத்துரைகளை இளம் அரசியல் செயற்பாட்டாளர் லக்சன், தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மூத்த செயற்பாட்டாளர் பாவரசன், ஊடகவியலாளர்களான கோபி ரட்ணம், கண்ணன், கே.வி.நந்தன், வேல் தர்மா ஆகியோர் ஆற்றினர்.
இந்நிகழ்வில் பங்கேற்ற Rayners Lane தொகுதி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் Chris Noris கருத்துரைக்கையில், தனியரசுக்கான தமிழர்களின் உரிமைப் போராட்டத்திற்கு தான் உறுதுணை நிற்பதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து மாற்றம் காணும் உலக ஒழுங்கும், தமிழர்களின் உரிமைப் போராட்டமும் என்ற தொனிப்பொருளின் கீழ் இரண்டாவது அமர்வு நடைபெற்றது.
இதன்பொழுது முதன்மை உரைகளை தாராண்மை சனநாயக (Liberal Democrats) கட்சிக்கான தமிழ்ச் செயற்பாட்டாளர் அ.அரசன், தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் (Tamils for Labour) அமைப்பின் தலைவர் சென் கந்தையா ஆகியோர் ஆற்றினர். சிறப்புரையினை அரசறிவியலாளர் கலாநிதி சுதா நடராஜா ஆற்றினார்.
தொடர்ந்து கருத்துரைகளை மூத்த ஊடகவியலாளரும், நாடகப் பேராசானுமான ஏ.சீ.தாசீசியஸ், ஊடகவியலாளர்களான சி.பிறேம், இ.தயானந்தா, ரவிசங்கர், குணா ஆகியோர் ஆற்றினார்.
இதனைத் தொடர்ந்து பார்வையாளர்களின் பங்கேற்புடன் விவாதம் நடைபெற்றது.
நிகழ்வின் நிறைவாக 2017ஆம் ஆண்டுக்கான அரசியல் நடவடிக்கைகள் பற்றிய ஆலோசனை நடைபெற்றது.
தகவல் + படங்கள் : அசோக்