விளக்கேந்திய சீமாட்டி எனப்படும் புளோரன்ஸ் நைட்டிங்கேல் புதிய தாதி முறைமையை உருவாக்கியவர். உருவாக்குதல்களும் கண்டு பிடிப்புகளும் தேவைகள் விஞ்சி நிற்கும் போது உருவாகும். தாதி முறைமையை உருவாக்க வேண்டிய தேவை கிறிமியாவை இரசியாவிடமிருந்து பறிக்கும் போர் 1853-ம்ஆண்டிலிருந்து 1856-ம் ஆண்டுவரை நடந்தபோது ஏற்பட்டது. இதில் போர்வீரர்கள் காயப்படுவதும் இறப்பதும் அதிகமாக இருந்தது. கிறிமியப் போர் முனையில் பணியாற்றியவர் புளோரன்ஸ் நைட்டிங்கேல். இந்தப்போரில் இரசியா பத்து இலட்சம் போர் வீரர்களையும் பலி கொடுத்தது. பிரித்தானியப் படையினரில் 25,000 பேரும் பிரெஞ்சுப் படையினரில் ஒரு இலட்சம் பேரும் கொல்லப்பட்டனர். ஐரோப்பியவரலாற்றில் இது மிக அதிகமான உயிரிழப்பை ஏற்படுத்திய போராகும். இறுதியில் ஒட்டொமன் பேரரசுக்கு சில விட்டுக் கொடுப்புக்களை இரசியா மேற்கொண்டு கிறைமியாவைத் தனதாக்கியது.
இந்தப் போரின் முக்கியத்துவம் புவிசார் அரசியலில் கிறிமியாவின் முக்கியத்துவத்தை எமக்குஉணர்த்துகின்றது.
என்ன இந்தப் புவிசார் அரசியல்
புவிசார் அரசியல் தொடர்பாக எழும் பிரச்சனைகள் என்ன என்பதை அறிய உக்ரேனில் இப்போது நடந்து கொண்டிருப்பது நல்ல உதாரணமாக அமைந்துள்ளது. புவிசார் அரசியலுக்கான வரைவிலக்கணம் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கின்றது. புவியியல் காரணிகளால் பாதிக்கப்படும் நாடுகளிடையேயான உறவுகள் தொடர்பான அரசியல் புவிசார் அரசியல் எனப்படும். இது ஒரு மிகச் சுருக்கமான விளக்கமாகும். 19-ம் நூற்றாண்டில் உருவான புவிசார்அரசியல் என்னும் பதம் பல மாற்றங்களை அவ்வப்போது சந்தித்து இப்போது இப்படிக் கூறப்படுகின்றது:
இயற்கை வளம், கேந்திரோபாய ஆதிக்கம்,புவிநிலப்பரப்பு ஆகியவை தொடர்பாக நாடுகளிற்கிடை அல்லது நாடுகளின் கூட்டமைப்புக்களிடையே நடக்கும் நடவடிக்கைகளும் நகர்வுகளும் போட்டிகளும் புவிசார் அரசியல்எனப்படுகின்றது.
இந்த வரைவிலக்கணத்தில் சந்தை தொடர்பாக நாடுகளிடை நடக்கும் போட்டிகள் தொடர்பாக ஏதும் உள்ளடக்கப்படவில்லை. உக்ரேன்தொடர்பான புவிசார் அரசியலில் சந்தையும்புவிநிலப்பரப்பும் முக்கியமானவையாகும். உக்ரேனை இரசியாவின் யூரோ ஏசியாக் கூட்டமைப்பில் இணைந்து அதன் சந்தையைபெரிதாக்குவதா அல்லது ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைத்து அதன் சந்தையைப் பெரிதாக்குவதா என இரசியாவும் ஜெர்மனியும் செய்த போட்டியில் உக்ரேன் அகப்பட்டது. இந்தப் போட்டியும் ஒரு புவிசார் அரசியல்தான். இது பெரிய மக்கள் தொகையாக் கொண்டஒரு பொருளாதாரக் கூட்டமைப்பை உருவாக்குவதில் நாடுகளுக்கு இடையிலான போட்டியாகும். உக்ரேனை நேட்டொவில் இணைத்து உக்ரேனின் ஒரு பிராந்தியமான கிறிமியாவில் இருக்கும் இரசியப் படைத்தளத்தில் இருந்து இரசியகடற்படையினரை அகற்ற முடியுமா என்ற மேற்கு நாடுகளுக்கும் இரசியாவிற்கும் இடையிலான போட்டிக்கு இடையில் உக்ரேன் அகப்பட்டது. இது மேலுள்ள வரைவிலக்கணத்தில் கேந்திரபாய ஆதிக்கத்துக்குள் அடங்குகிறது.
கிறிமியாவின் வரலாறு
கிறிமியாவிற்காக மூன்று ஆண்டுகள் நடந்த போர் அதன் கேந்திர முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. 1783-ம் ஆண்டில் இருந்து கிறிமியா இரசியாவின் ஒரு பிரதேசமாகவே இருக்கின்றது. 1917-ம் ஆண்டு நடந்த இரசியப்புரட்சியின் போது கிறிமியா ஒரு தனி நாடாகச் சிலகாலம் இருந்தது. பின்னர் மீண்டும் இரசியாவின் ஒரு பிரதேசமாக்கப்பட்டது. 1921-ம் ஆண்டு கிறைமியா சோவியத் ஒன்றியத்தின் ஒருகுடியரசானது. 1942-ம் ஆண்டு உலகப் போரின்போது ஜேர்மனி கிறைமியாவைக் கைப்பற்றியது. ஜேர்மனி கிறைமியாவைக் கைப்பற்ற ஆறுமாதங்களுக்கு மேல் எடுத்தது.1944-ம் ஆண்டுகிறைமியாவை சோவியத் ஒன்றியம் மீளக் கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து ஜேர்மனியருடன் ஒத்துழைத்தார்கள் என்பதற்காக ஜோசப் ஸ்டாலின் கிறைமியக் குடிமக்களான டாட்டார் இசுலாமியர்கள் மூன்று இலட்சம் பேரை கிறைமியாவில் இருந்து வெளியேற்றி சோவியத்தின் வேறு பிராந்தியங்களில் குடியேற்றினார். சோவியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர் பலர் திரும்பி வந்தனர். 1945-ம் ஆண்டு கிறிமியா சோவியத் ஒன்றியத்தின் கீழ் ஒரு குடியரசு என்றநிலையை நீக்கி அது சோவியத்தின் ஒரு மாகாணமாக மாற்றப்பட்டது. 1954-ம் ஆண்டு கிறிமியாவை இரசிய அதிபர் நிக்கித்தா குருசேவ் உக்ரேனுடன் இணைத்தார். உக்ரேனியரான குருசேவ் இரசியாவிற்கு தவறிழைத்தார் என்கின்றனர் இரசியர்கள் இப்போது.1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சியின் போது அப்போதைய இரசிய அதிபர் போரிஸ் யெல்ற்ஸின் கிறிமியாவை இரசியாவின் ஒரு பகுதியாக வைத்திருப்பார் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் அவர் அதை உக்ரேனுடன் தொடர்ந்து இருக்க வைத்து கிறிமியாவில் இரசியக் கடற்படை தொடர்ந்து இருக்க உடன்பாடு செய்து கொண்டார். 1997-ம் ஆண்டு 2042-ம் ஆண்டுவரை இரசிய படைத்தளம் கிறிமியாவின் செவஸ்ரப்பொல் பிராந்தியத்தில் இருக்க உக்ரேனும் இரசியாவும் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டன.
கிறிமியாவின் கேந்திர முக்கியத்துவம்
உலகிலேயே மிகப் பெரும் நிலப்பரப்பைக் கொண்ட இரசியாவிற்கு கருங்கடலில் மட்டுமே குளிரற்ற நீர்க்கடற்பரப்பு உள்ளது. கிறிமியா கருங்கடலில் உள்ள ஒரு குடாநாடு ஆகும். அது கடலால் சூழப்பட்டு ஒரு சிறு நிலப்பரப்பு மட்டுமே உக்ரேனுடன் இணைந்திருக்கின்றது. கிறிமியாவில் இருக்கும் இரசிய கடற்படைப் பிரிவு மத்திய தரைக்கடலிலும் மத்திய கிழக்கிலும் இரசியாவின் ஆதிக்கத்தை நிலை நாட்டமிகவும் முக்கியத்துவம் மிக்கது. ஐக்கிய அமெரிக்காவுடனும் சீனாவுடனும் ஒப்பிடுகையில் கடற்படை வலு பின் தங்கி இருக்கும் நிலைமோசமடைந்து கொண்டிருக்கின்றது. இரசியக் கடற்படைக் கப்பல்களை துருப்பிடித்த வாளிகள் என சில படைத்துறை நிபுணர்கள் விமர்சிக்கின்றனர். இந்நிலையில் கிறிமியாவை இழந்தால் இரசியாவின் உலக ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் விளாடிமீர் புட்டீனின் கனவு நிறைவேறாது. இரசியா அமைக்க விரும்பும் ஈரோ ஏசிய வர்த்தகக் கூட்டமைப்பில் உக்ரேனை இணைப்பது முக்கியமாகும்.
இரசிய அதிபர் புட்டீனின் துருப்புச் சீட்டுக்கள்
உக்ரேனில் பதவியில் இருந்து நீக்கப்பட்ட விக்டன் யனுக்கொவிச், கிறிமியாவில் இருக்கும்இரசியப் படைகள், உக்ரேனில் இருக்கும் இரசியர்கள் ஆகியவை உக்ரேன் விவகாரத்தில் இரசியாவில் கையில் இருக்கும் துருப்புச்சீட்டுகளாகும். பதவியில் இருந்து விலக்கப்பட்டவிக்டர் யனுக்கோவிச்தான் உக்ரேனின் சட்டபூர்வ ஆட்சியாளர் என்கிறார் புட்டீன். இப்பொதுஉக்ரேனில் இருக்கும் ஆட்சியாளர்கள் சட்டவிரோதமானவர்கள் என்றும் ஒரு படைத்துறைச் சதியின் மூலம் உக்ரேனிய அரசமைப்புக்கு விரோதமாக ஆட்சியை கைப்பற்றியுள்ளார்கள் என்றும் சொல்கிறார் புட்டீன்.
அமெரிக்காவின் உளவுத் துறைக்கு இன்னும் ஒரு தோல்வி!
எகிப்த்தில் மக்கள் அமெரிக்க சார்பு ஆட்சியாளரான ஹஸ்னி முபாரக்கிற்கு எதிராக மக்கள்கிளர்ந்து எழுவார்கள் என முன் கூட்டியே அறிய அமெரிக்க உளவுத் துறையான சிஐஏ தவறியது. இதைத் தொடர்ந்து உக்ரேனில் தனக்கு வேண்டிய ஆட்சியாளரை தூக்கி எறிந்தால் இரசியா ஒரு படை நடவடிக்கையை மேற் கொள்ள மாட்டாது என சி.ஐ.ஏ அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு அறிவுறுத்தத் தவறிவிட்டது. உக்ரேனின் ஒரு தன்னாட்சிப் பிராந்தியமான கிறிமியாவில் இரசியா எந்த ஒரு படை மோதலும் இன்றி அதை தனதாக்கிக் கொண்டுள்ளது. இப்போது உக்ரேன் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை, உளவுத்துறை, தேசிய பாதுகாப்பு முகவரகம் ஆகியவற்றிடை கடும் முரண்பாடு நிலவுகின்றது. அமெரிக்கா போல்ரிக் பிராந்திய நாடுகளிற்கு தனது போர் விமானங்களை அனுப்பியுள்ளது.

விளடிமீர் புட்டீனுக்கு இன்னும் ஒரு வெற்றி
சோவியத் ஒன்றியத்தின் வீழ்ச்சிக்குப் பின்னர்சரிந்து போன இரசியப் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்தி, செஸ்னியக் கிளர்ச்சிக்காரர்களை அடக்கி, ஜோர்ஜியாவிற்குப் பாடம் புகட்டி, பராக் ஒபாமாவின் செங்கோடு தாண்டிய சிரியாவைப் பாதுகாத்து அமெரிக்காவின் முகத்தில் கரிபூசி, எகிப்தை மீண்டும் தன் பக்கம் இழுத்துஉலக அரங்கில் தலை நிமிர்ந்து நின்றது விளடிமீர் புட்டீர்ன் தலைமையில் இரசியா. அடுத்து உக்ரேனை ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைவதைத் தடுத்து தனது பொருளாதாரக் கூட்டமைப்பில் இணைப்பது இரசியாவின் இலட்சியமாக இருந்தது. அந்தத்திட்டத்திற்கு உக்ரேனில் நடந்த ஆட்சி மாற்றம்பேரிடியாக அமைந்தது. ஆனால் சுதாகரித்துக் கொண்ட புட்டீன் ஒரு துளி இரத்தம் கூடச் சிந்தாமல் கிறிமியாவைத் தனதாக்கினார். புட்டீன் சீன அதிபர் ஷி ஜின்பிங்கைத் தொடர்பு கொண்டு உக்ரேன் விவகாரத்தில் தனக்கு ஆதரவு வழங்கும் படி வேண்டினார். ஆனால் சீன அதிபர் பட்டும் படாமலும் பதில் கொடுத்து விட்டார். சீனாவிற்கும் இரசியாவிற்கும் இடையில் இனி வரும் காலங்களில் மத்தி ஆசியப் பிராந்தியம் தொடர்பான ஆதிக்கப் போட்டி வரும் வாய்ப்புக்கள் நிறைய இருக்கின்றன.
கிறிமியா நிச்சயம் உக்ரேன் இலட்சியம்
இரசிய அதிபர் புட்டீனைப் பொறுத்தவரை கிறிமியாவைத் தனதாக்குவது நிச்சயம். பின்னர்உக்ரேனில் தனக்குச் சார்பானவர்களை ஆட்சியில் அமர்த்துவது இலட்சியமாக இருக்கின்றது. உகிரேனின் கீழ் தன்னாட்சி உரிமையுள்ள பிராந்தியம் என்றவகையில் கிரிமியப் பாராளமன்றம் தமது ‘நாட்டை’ இரசிய கூட்டாட்சியகத்தின் ஒரு பகுதியாக இணைக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இனி இது மக்கள் மத்தியில் வாக்கெடுப்புக் விடப்பட்டு கிறிமியா இரசியாவுடன் இணைக்கப்படும். உக்ரேனில் இரசிய சார்பு ஆட்சியாளர்கள் அமையாமல் போனால் இரசியர்கள் அதிகம் வாழும் உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தில் இரசியாவால் பெரும் பிரிவினை வாதத்தை வளர்க்க முடியும்
தெரிவுகளற்ற நிலையில் ஒபாமா
விளடிமீர் புட்டீன் ஆர்ப்பாட்டமில்லா அதிரடி நடவடிக்கையால் கிறிமியாவைத் தனதாக்கியதும் அவரால் உக்ரேனின் கிழக்குப் பிராந்தியத்தையும் இழப்புக்கள் இன்றிக் கைப்பற்றலாம் என்ற நிலை இருப்பதாலும். அமெரிக்க நிர்வாகம் செய்வதறியாமல் நிற்கின்றது. வெறும் பொருளாதாரத் தடை என்றும் இராசதந்திரத் தனிமைப்படுத்துதல் என்றும் மிரட்டல்களை விடுப்பதைத் தவிர அமெரிக்காவால் பெரிதாக ஒன்றும் செய்ய முடியவில்லை.
ஆனால் இரசியாவின் நிதிச் சந்தை மேற்கு நாடுகளை முந்திக் கொண்டு புட்டீனைத் தண்டித்தது. உக்ரேன் விவகாரத்தைத் தொடர்ந்து இரசியாவின் பங்குச் சந்தையில் இரசிய வர்த்தக நிறுவனங்களின் பங்குகள் தமது பெறுமதியில் 34 பில்லியன் (மூவாயிரத்து நானூறு கோடி) டொலர்களை இழந்தன. இரசிய அரசு தனது நாணயமான ரூபிளின் பெறுமதி மோசமடையாமல் இருக்கு பத்து பில்லியன் வெள்நாட்டுச் செலவாணியை இழக்க வேண்டி இருந்தது. அமெரிக்காவின் பொருளாதாரத் தடையை ஜேர்மன் உட்பட்ட சில மேற்கு ஐரோப்பிய நாடுகள் விரும்பவில்லை. இரசியாவிலிருந்து இறக்குமதி செய்யும் எரிவாயுவில் ஜேர்மனி பெரிதும் தங்கி இருக்கின்றது.
உக்ரேன் மீண்டும் அணுக்குண்டைக் கையில் எடுக்குமா?
இரசியாவின் நகர்வுகளால் ஆத்திரமடைந்த உக்ரேன் தான் மீண்டும் ஒரு அணுக் குண்டு நாடாக மாறவேண்டும் என்கின்றது. 1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றிய விழ்ச்சியின் பின்னர் உக்ரேன் தனியான ஒரு நாடாகிய போது அதனிடம் நிறைய அணுக்குண்டுகள் இருந்தன. எண்ணிக்கை அடிப்படையில் உக்ரேன் அப்போது உலகில் மூன்றாவது அணுக்குண்டு நாடாக இருந்தது. ஆனால் அணுக்குண்டுகளை வைத்திருக்க விரும்பாத உக்ரேன் தனது நாடுகளை இரசியாவில் வைத்து அழிக்க ஒத்துக் கொண்டது. அதன் பேரில் உக்ரேன் அரசு இரசியா, ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா ஆகிய நாடுகளுடன் ஒரு உடன்படிக்கையைச் செய்து கொண்டது. Budapest Memorandum உடன்பாடு எனப்படும் அந்த உடன்படிக்கையின் படி இரசியா, ஐக்கிய அமெரிக்க, பிரித்தானியாஆகிய நாடுகள் உக்ரேனின் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதாக ஒத்துக் கொண்டன. இப்போது இரசியாவின் நகர்வுகள் அந்த உடன்பாட்டை மீறுவதாக உக்ரேன் குற்றம் சாட்டுகின்றது. அத்துடன் உக்ரேனால் மூன்று அல்லது ஆறு மாதங்களுக்குள் அணுக்குண்டுகளை உற்பத்தி செய்ய முடியும். அதற்குரிய தொழில்நுட்ப வல்லமையும் வளமும் உக்ரேனிடம் இருக்கின்றது. மேற்கு ஐரோப்பிய நாடுகள் தமது எல்லைகளை உறுதி செய்ய இரு பெரும் போர்கள் தேவைப்பட்டது