மாவீரர் எழுச்சி நாளின் நிகழ்வுகளும் நடைமுறை ஒழுங்குகளும்.

199

1989 ஆம் ஆண்டில் நவம்பர் 27ஆம் நாள் மாவீரர் நாளாகவும், 1990 ஆம் ஆண்டிலிருந்து 1994 ஆம் ஆண்டுவரை நவம்பர் 21 ஆம் நாளில் இருந்து 27 ஆம் நாள்வரை மாவீரர் வாரமாகவும் தமிழீழ மக்களால் எழுச்சி நிகழ்வாக நடைபெற்றுவந்த தமிழீழ மாவீரர் எழுச்சி நாள் நிகழ்வுகள் 1995 ஆம் ஆண்டிலிருந்து நவம்பர் 25 ஆம் நாளிலிருந்து 27 ஆம் நாள் வரை மூன்று நாட்கள் தமிழீழ மாவீரர் எழுச்சி நாட்களாக கடைப்பிடிக்கப்படவிருக்கின்றன.

தமிழீழ தேசியக்கொடி ஏற்றலுடன் மாவீரர் எழுச்சி நாள் ஆரம்பமாகும்

மாவீரர்நாள் தொடக்க நிகழ்வுகள்.

[padding right=”10%” left=”10%”]1.பொதுச் சுடரேற்றல்.
2.தேசியக்கொடி ஏற்றல்
3.ஈகைச்சுடரேற்றல்
4.மலர்வணக்கம்
5.அகவணக்கம்
6.உறுதியுரை
7.நினைவுரை[/padding]

என்பன மேற்படி வரிசை ஒழுங்கில் மேற்கொள்ளப்படும் தொடக்க நிகழ்வுகள் மாவீரர் எழுச்சி நாட்களான மூன்று நாட்களிலும் நடைபெறும்.

தேசியக் கொடியேற்றல்

மாவீரர் எழுச்சி நாட்களுக்கான நிகழ்வுகள் நவம்பர் 25 ஆம் நாள் அன்று காலை 08.30 மணிக்கு தேசியக்கொடியேற்றலுடன் ஆரம்பமாகும்.

மாவீரர் துயிலுமில்லங்களில் 25ஆம் நாள் காலை 08.30 மணிக்கு ஏற்றப்படும் தேசியக்கொடி நவம்பர் 27 மாவீரர் நாள் நிகழ்வுகள் நிறைவடைந்த பின் இறக்கப்படும்.

இயக்கப்பணிமனைகள், தளங்களில் முதல் இரண்டு நாட்களிலும் மாலை 6.00 மணிக்கு கொடி இறக்கப்பட்டு மறு நாள் காலை ஏற்றப்படும். 27 ஆம் நாள் மாவீரர் நிகழ்வுகள் நிறைவடைந்த பின் இறக்கப்படும்.

பொது நிறுவனங்களிலும், பள்ளிகளிலும் ஒவ்வொரு நாளும் பணி முடிந்த பின் பகல் 12.01 இன் பின்பாகவும் மாலை 6.00 மணிக்கு முன்பாகவும் தேசியக்கொடி இறக்கப்பட்டு மறுநாட்காலை ஏற்றப்படவேண்டும்.

நினைவொலி எழுப்பலும், சுடரேற்றலும்,

27 ஆம் திகதி சுடரேற்றலும் நேரத்தை தமிழீழ மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள். மாலை 6.05 மணிக்கு தமிழீழமெங்கும் சம காலத்தில் அனைத்து ஆலய தேவாலய மணிகளும் ஒரு மணித்துளி நேரம் ஒலி எழுப்பும் அந்த நேரத்தை தொடர்ந்து எல்லா மக்களும் அகவணக்கம் செலத்துவார்கள்.

துயிலுமில்ல மைதான நடுவில், பீடத்தில் சற்று உயரமான பெரிய சுடர் நாட்டப்பட்டிருக்கும், மக்கள் வெள்ள உணர்வு கொந்தளிப்போடு மைதானத்தைச் சுற்றி நின்று தியாகங்களை நெஞ்சில் நினைத்திடத் தீச்சுடர் ஏற்றப்படும். அமைப்பின் முதன்மையானவர்கள் மத்திய சுடரை ஏற்ற மாவீரரின் பெற்றோர் உரித்துடையோர் தீச்சுடரை சமகாலத்தில் ஏற்றுவர். சமகாலத்தில் ஒவ்வொரு இல்லங்களிலும், வாசலிலும் மாவீரரின் சுடர் ஒளியை அனைவரும் ஏற்றுவர்.

சுடரானது சுவாலை விட்டெரியும் ஒவ்வொரு சுடர்களிலும் மாவீரர்களின் முகங்கள் பிரகாசிக்கும். தமிழீழம் முழுவதும் சுடரொளி ஓங்கிப்பரவும். மக்கள் குமுறி எழுந்து கண்ணீர்விட்டு நிற்க தியாககிகளின் காவியங்கள் ஒவ்வொரு தமிழீழ மக்கள் உணர்வுகளிலும் மீட்டப்படும்.

சுடரேற்றி தியாக தீபங்கள் இவை என்று கூறத்தக்கதாகவே நினைவு கூரப்பட வேண்டும். வானத்தில் மின்னும் நட்சத்திரங்கள் போல தமிழீழமெங்கும் மாவீரர் சுடர்கள் இந் நேரத்தில் எங்கும் ஒளிரவேண்டும். சிட்டி விளக்கேற்றக்கூடிய இடங்களில் தொகையான சிட்டி விளக்குகளை ஏற்றி நினைவு கூரலாம். வாசலில் தீபங்கள் எரியும் போது இடங்களில் பெரிய சுடர்களை ஏற்றியும் நினைவுகூரவேண்டும்.

இந்த சுடரேற்றும் நிகழ்வானது.
விடுதலைப்பாதைக்கு
உறுதியையும், உணர்வையும்
கொடுத்து நிற்கின்றது.

நவம்பர் 27 இரவு நிகழ்வுகள்

தேசியத்தலைவர் அவர்களின் மாவீரர் நினைவுரை

மாலை 6.05 மணிக்கு ஒலி எழுப்பும் நிகழ்வு தொடங்கக்கூடியதாக தேசியத் தலைவர் அவர்களின் மாவீரர் நினைவுரை நிகழ்வு இடம்பெறும்.

நினைவொலி எழுப்புதல். (06.05 மணி)

தேசியத்தலைவர் அவர்களின் மாவீரர் நினைவுரை நிறைவடைந்தவுடன் உடனடியாக 6.05 மணிக்கு அனைத்து வழிபாட்டிடங்களிலும் மணி ஒலி ஒரு மணித்துளி நேரம் எழுப்பப்படும் உயிர்காப்பு பணியில் ஈடுபடும் ஊர்திகள் தவிர ஏனைய அனைத்து ஊர்திகளும் நிகழ்ச்சி தொடங்குவதற்கு ஏற்றவகையில் நிறுத்தப்பட்டு அமைதிபேணப்படல்வேண்டும்.

அகவணக்கம் (6.06மணி)

மாவீரர்களுக்கான நினைவொலி நிறுத்தப்பட்டவுடன் 06.06 மணிக்கு மாவீரர்களுக்கான ஒரு மணித்துளி அகவணக்கம் செலுத்தப்படும் இந்நேரம் இல்லங்களிலும், ஏனைய இடங்களிலும் இருக்கும் தமிழீழ மக்கள் எழுந்து நின்று மாவீரர்களை நினைவில் நிறுத்தி அகவணக்கம் செலுத்தல் வேண்டும்.

ஈகைச்சுடரேற்றல் (06.07 மணி)

அகவணக்கம் நிறைவுற்றதும் 06.07 மணிக்கு ஈகைச்சுடர் ஏற்றப்படல்வேண்டும் (மாவீரர்களின் பெற்றோர் அவரவர் சுடர் ஏற்றவேண்டிய கல்லறைகள், நினைவுக் கற்களுகு முன்னால் 5.15 மணிக்கு நிற்கக்கூடிய வகையில் அனைத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கும்.)

மாவீரர் துயிலுமில்லங்களிலுள்ள மாவீரர் கல்லறைகள், நடுகற்கள் முன் மாவீரர்களின் பெற்றோர், குடும்பத்தினர் அதேநேரம் மாவீரர் துயிலுமில்லங்களில் இடம்பெயர்ந்த மாவீரர் பெற்றோர்கள் அவர்களுக்கென ஒழுங்குசெய்யப்பட்ட இடங்களில் ஈகைச்சுடர் ஏற்றுவர்.

இவை தவிர துயிலுமில்லங்களுக்கு வராத பொது மக்கள் தமது இல்லங்களில், பொதுஇடங்களில், அலுவலகங்கள், விளையாட்டு இடங்கள், தொழிற்சாலைகள் போன்ற இடங்களில் உரிய நேரத்தில் உரியமுறைப்படி ஈகைச்சுடர் ஏற்றுவர் ஈகைச்சுடர் ஏற்றும்போது மாவீரர் பாடல் ஒலிக்கப்படும் (மாவீரர் ஈகைச்சுடர் ஏற்றப்படும் நேரத்தில் அதன் நோக்கத்தைப் புரிந்துகொள்ளாது வீதிகளில் ரயர்களை எரிப்பதோ அல்லது வேறுவகையில் ஒலி, ஒளி உருவாக்குவதோ தவிர்க்கப்படல்வேண்டும்.)

அலங்காரம் (சோடனை)

எமது அமைப்பைச் சார்ந்த வீரச்சாவு, வீரவணக்கக்கூட்டம், துயிலுமில்ல, மாவீரர் விசேட நிகழ்வு வேறு அனைத்து நிகழ்வுகளுக்கான அலங்காரங்கள், சமூக சமய, வேறு அரசியல் சார்ந்ததாக இருக்காமல், எமது தேசியக்கொடி நிறங்களைப் பிரதிபலிப்பதாக அமைதல் வேண்டுமெனக் கேட்டுக்கொள்கின்றேன்.

எமது அலங்கார முறையும், நிறங்களும்

சிவப்பு, மஞ்சள், கறுப்பு – தேசியக்கொடியைப் பிரதிபலிக்கும், கறுப்பு கரும்புலிகள் தினத்திற்கும் கரும்புலிகள் சம்பந்தமான நிகழ்வுகட்கு மட்டும் கலந்து சோடிக்கலாம்.
வீரச்சாவு கல் நாட்டலுக்கு சிவப்பு, மஞ்சள் துணிகளைப் பாவித்தல் வேண்டும்.
மேசைவிரிப்பு, பீட விரிப்புகளும் சிவப்பு, மஞ்சள் துணியாகவே இருத்தல்வேண்டும். வெள்ளை விரித்தலைத் தவிர்த்தல் நன்று.
இச்சோடனைகள் தனித்துவமாக மாவீரர்களின் தற்கொடைத் தியாகம், அமைப்பு இலட்சியங்களை மக்கள் மனங்களில் தேன்றிப் பதிந்து எமது போராட்டத்தின் பால் இணைந்து செயற்பட வழிசமைத்தல்வேண்டும்.

கடைப்பிடிக்க வேண்டிய சில நடைமுறைகள்.

ஆரம்ப நிகழ்வுகள்

[padding right=”10%” left=”10%”]01.பொதுச்சுடர்
02.தேசியக்கொடி ஏற்றல்
03.ஈகைச்சுடர்
04.மலர்வணக்கம்
05.அகவணக்கம்
06.உறுதியுரை
07.நினைவுரை[/padding]

எமது மாவீரர் நிகழ்வுகள் அமைப்பு நிகழ்வுகள் அனைத்திலும் ஈகைச்சுடர் ஏற்றுதல் கட்டாயமாகும். மங்கள விளக்கு ஏற்றக்கூடாது.

அகவணக்கத்துக்கு நேரம் குறிக்கக்கூடாது.

தவிர்க்கவேண்டியவை

அஞ்சலி, மௌன வணக்கம், மலரஞ்சலி, மங்கள விளக்கு, அஞ்சலியுரை, அஞ்சலிக்கூட்டம், அகவணக்கம், ஒருநிமிடம் இருநிமிடம் எனக்குறித்துக் கூறுதல்.

சேர்க்கப்படவேண்டிவை

வீரவணக்கம், அகவணக்கம், மலர்வணக்கம், ஈகைச்சுடர், வீரவணக்கவுரை, வீரச்சாவு வீரவணக்கக்கூட்டம்.

முக்கியவிடயம்.

மாலை 6.00 மணிக்குப் பின்னர் எந்த நிகழ்விற்கும் தேசியக்கொடி ஏற்றுதல் தவிர்க்கப்படவேண்டும் இரவில் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறுமானால் நிகழ்வு முடிய இறக்குதல்வேண்டும். இரவில் தேசியக்கொடிக்கு வெளிச்சம் இருத்தல்வேண்டும்.

எக்காரணம் கொண்டும் தேசியக்கொடியைக் கம்பத்துடன் மடித்துக்கட்டுதல் தவிர்க்கப்படல் வேண்டும். தேசியக்கொடியை மடித்து பீடத்திற்கு அருகில் ஒரு இருக்கையில் (ஸ்ரூலில்) வைக்கவேண்டும்.

போற்றப்பட வேண்டிய பண்பாடாகட்டும்.

எமது தாயகமாம் தமிழீழ நாட்டின் தேசிய நாட்களில் மாவீரர் நாள் மிக முக்கிய நாளாகும். மாவீரர் நாள் என்பது, தமிழீழத்தின் விடிவுக்காகவும், உயர்வுக்காகவும், உழைத்து உயிரைத் தற்கொடையாக ஈந்து, இந்த மண்ணிற்கே உரமாகிவிட்டவர்களினதும் எமது மூச்சுடன் கலந்து விட்டவர்களினதுமாகிய நினைவு நாளாகும்.

உங்கள் உயிரிலும் மேலான குழந்தைகளும், எமது சகபோராளிகளுமான இம்மாவீரர்களின் தியாகம், அவர்களின் உணர்வுகள், இலட்சிய தாகம், கனவுகள் என்பன எம்மால் மறக்கப்பட முடியாதவையாகும். புனிதத் தன்மை வாய்ந்ததுமாகும். காலம் காலமாக நினைவு கூர்ந்து என்றும் போற்றப்படவேண்டியவையாகும்.

இம் மாவீரர்களின் நினைவுகள் எம்மை வழிநடத்தும் உந்து சக்தியாக என்றும் இருக்கும் மாவீரர்களினது இத்தகைய கூரல் என்பது ஒரு நிகழ்வாக இருந்து விடாது எமது நாட்டு மக்களின் வரலாற்றுச் சுவடியாகவும், பண்பாட்டுக்குரியவையாகவும் வளர்ந்து வரவேண்டும்.

இந்த எமக்குரிய உயரிய நிகழ்வை தத்துவார்த்தமாகவும், உணர்வு பூர்வமாகவும் நிலை நாட்டுவதற்காக எமது தமிழீழ மக்கள் அனைவரினதும் மனமுவந்த, ஒருங்கிணைந்த பங்களிப்புகளை வேண்டி நிற்கின்றோம்.

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

நன்றி!

பணி முதல்வர்,
தமிழீழ மாவீரர் பணிமனை,
அரசியல் துறை,
தமிழீழ விடுதலைப்புலிகள்,
தமிழீழம்,

புலம்பெயர் நாடுகளில் மாவீரர் நாள் (நவம்பர்-27)

புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழ்ப் பாடசாலைகளில் மாவீரர் மாண்புகளை இளைய தலைமுறையினருக்கு எடுத்துக் கூறி தமிழ்த் தேசிய உணர்வை மேம்படுத்துவதற்காகவும் மாவீரர் நாள் தொடர்பான பூரண தெளிவையும் ஏற்படுத்தும் வகையில் வருடாவருடம் நவம்பர் 27 இற்கு முதல்வரும் வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களை திகதிகளுடன் குறிப்பிட்டு அல்லது குறித்த நாட்டின் மாவீரர் தினம் கொண்டாடப்பட முன்பு மூன்று நாட்களைக் குறிப்பிட்டு அந்நாட்களில் மாவீரர் தொடர்பான விளக்கவுரைகளை முன்னெடுத்தல்வேண்டும். குறிப்பாக (மாவீரர் சாதித்த அருஞ்செயல்கள், தியாகங்கள், மாவீரர் வரலாறுகள் போன்றவற்றை விளக்குவதன்மூலம் இளைய தலைமுறையினரூடாக எமது மாவீரர்கள் தியாகங்கள் கட்டிக்காத்தல்வேண்டும்.