2014-ம் ஆண்டு மே மாதம் நடந்த இந்தியப் பாராளமன்றத்தின் மக்களவைக்கான தேர்தலில் வெற்றி பெற்று நரேந்திர மோடி தலைமையில் ஆட்சியமைத்த பாரதிய ஜனதாக் கட்சியின் (பா.ஜ.க) முக்கிய பிரச்சனைகளாக அமைந்தவை:-
1. காங்கிரசுக் கட்சி பதவியில்அமர்த்திய குடியரசுத் தலைவரும் ஆளுநர்களும்
2. இரு நூற்று ஐம்பது உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில் பா.ஜ.கவிற்கு 43உறுப்பினர் மட்டுமே இருப்பது
3. இருபத்தெட்டு மாநில சட்ட மன்றங்களில் நான்கு மட்டுமே பா.ஜ.கவின் கட்டுப்பாட்டில் இருந்தமை.
பா.ஜ.கவினர் தொடர்ந்து பல ஆண்டுகள் ஆட்சிதடையின்றிச் செய்வதாயின் அது பல சட்டமன்றங்களைக் கைப்பற்ற வேண்டும். அப்போது தான் அடுத்த குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.கவினர் நிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெற முடியும் அத்துடன் மாநிலங்களவையில் பெரும்பான்மை வலுவைப் பெறமுடியும்.
மோடிக்குத் தேவையான மஹராஸ்ட்ரா
நரேந்திர மோடியின் பொருளாதாரத் திட்டங்களையும் அவர் வாக்குறுதியளித்த பொருளாதாரச் சீர்திருத்தங்களையும் முன்னெடுக்க இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரான மும்பாயைக் கொண்ட மஹராஸ்ட்ரா மாநிலத்தை அவர் எப்படியும் கைப்பற்ற வேண்டும் என்பதற்கான திடசங்கற்பத்துடன் மோடி செயற்பட்டு ஒக்டோபர் மாதம் 15-ம் திகதி நடந்த தேர்தலில் 288 தொகுதிகளில் 122 தொகுதிகளைக் கைப்பற்றினார். அதே நாளில் ஹரியானா மாநிலத் தேர்தலில் பா.ஜ.கவினர் வெற்றி பெற்றனர்.
மதவாதமும் இனவாதமும்
பாரதிய ஜனதாக் கட்சியும் சிவசேனாவும் இந்து மத மேலாண்மையை ஏற்றுக் கொண்டாலும் சிவசேனாவின் மராத்தியப் பிராந்தியவாதத்தை பா.ஜ.க விரும்பவில்லை பா.ஜ.கவின் இந்திப் பேரினவாதத்தை சிவசேனா விரும்புவதில்லை. இரு தரப்பினரும் மற்ற மதங்களையிட்டு ஏறக்குறைய ஒரே கொள்கையை உடையவர்கள். பாபர் மசூதி இடிப்பில் ஒரே கொள்கையுடையவர்கள். பால் தக்கரேயால் 1966-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சிவசேனை அவரதுமறைவின் பின்னர் இரண்டாகப் பிளவு பட்டது.ராஜ் தக்கரே மஹராஸ்ட்ர புனரமைப்புச் சேனையை 2006-ம் ஆண்டு ஆரம்பித்தார். ராஜ்தக்ரே சிவசேனாவிற்குள் இருந்து அந்தக் கட்சியை தனதாக்கிக் கொள்ளும் அளவிற்கு அவருக்கு கட்சிக்குள் செல்வாக்கு இருந்தது. இருந்தும் சகோதரப் போரைத் தவிர்க்க அவர் தனிக் கட்சி ஆரம்பித்தார். இந்தப் பிளவால் சிவசேனா வலுவிழந்து விட்டது என இந்தியத்தலைமை அமைச்சர் மோடியும் அவரது தளபதி அமித் ஷாவும் உணர்ந்து கொண்டு செயற்படுவதாக உதவ் தக்கரே கருதுகின்றார். 2014-ம்ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் இந்திய மைய அரசில் சிவசேனா கேட்ட அமைச்சுப் பதவிகளை வழங்காமை இரு கட்சிகளிற்கும் இடையிலான மோதலை உருவாக்கியிருந்தது.
சிவசேனாவுடன் கூடாத கூட்டணி
மே மாதம் நடந்த பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி சட்ட மன்றத் தேர்தலிலும் போட்டியிடவேண்டும் என இரு கட்சிகளும் விருப்பம்தெரிவித்தன. இந்தியாவின் பொருளாதாரத் தலைநகர் `மண்ணின் மைந்தர்களுக்கே’ என்றகொள்கையுடையது சிவசேனா அமைப்பு. மும்பாயில் வேலை தேடியும் வர்த்தகம் செய்யவும்வேறு மாநிலத்தவர்கள் வருவதை எதிர்த்துசிவசேனா அமைப்பு 1966-ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. சிவ சேனா மராத்தியப் பிரதேச வாதத்தையும் இந்துத் தேசிய வாதத்தையும் தனது இரு கண்களாகக் கொண்டுள்ளது எனச்சொல்லலாம். இந்துத் தேசியவாதக் கொள்கைசிவசேனாவையும் ப.ஜ.கட்சியினரையும் நெருங்கிச் செயற்பட வைத்தது. ஆனால் 2014ஒக்டோபர் 15-ம் திகதி நடந்த மஹாராஸ்ட்ராசட்ட மன்றத் தேர்தலில் இருகட்சிகளும் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு எட்டாமையினால் தனித் தனியே போட்டியிட்டன. இதனால் 288 சட்ட மன்றத் தொகுதிகளுக்கான நடந்த தேர்தலில் நான்கு முனைப் போட்டிநடந்தது. பா.ஜ. கட்சி சிவசேனைக்கு 130தொகுதிகள் வரை கொடுக்க உடன்பட்டிருந்தது.
சிவசேனா அதிலும் அதிகமான தொகுதிகள் கேட்டது. ஆனால் தேர்தல் முடிவு பா.ஜ.கவிற்கு சாதகமாக அமைந்தது. பா.ஜ.க 122 தொகுதிகளிலும் சிவசேனா 63 தொகுதிகளிலும் காங்கிரசுக் கட்சி 41 தொகுதிளிலும் தேசியவாதக் காங்கிரசுக் கட்சி 41 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. அறுதிப் பெரும்பான்மையை பா.ஜ.க பெற்றிராத நிலையில் சிவசேனா ஒருபேரம் பேசக் கூடியதாக இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்த நிலையில் தேசியவாதக் காங்கிரசுக் கட்சியின் தலைவர் சரத் பவார் ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். பா.ஜ.கட்சி ஆட்சிஅமைக்க தான் நிபந்தனை அற்ற ஆதரவைவழங்கப் போவதாக அறிவித்தார். 25 ஆண்டுகளாக ஒன்றாக இருந்த பாஜகவும் சிவசேனாவும் ஒன்றுடன் ஒன்று முரண்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
விரோதத்தை பெரிதாக்கும் விதர்ப்ப தேசம்
மஹாராஸ்ட்ராவின் ஒரு பகுதியாக விதர்ப்ப தேசம் இருக்கின்றது. விதர்ப்ப தேச மக்களில் பலர் தாம் மஹராஸ்ட்ராவில் இருந்து பிரிந்து செல்ல வேண்டும் என விரும்புகின்றனர். சிவசேனாவின் பிராந்தியவாதத்தை வலுவிழக்கச்செய்ய பேரினவாதக் கட்சியான பாஜக விதர்ப்பதேசப் பிரிவினையை ஆதரிக்கின்றது. இது இருகட்சிகளிடையே பேதத்தை 2014-ம் ஆண்டுபெப்ரவரி மாதம் தீவிரமடையச் செய்தது. 2014-ம்ஆண்டு ஒக்டோபர் மாதம் 15-ம் திகதி நடந்தமஹாராஸ்ட்ரா மாநிலத் தேர்தலில் பாஜகவிற்கும் சிவசேனாவிற்கும் இடையில் தொகுதிப்பங்கீட்டில் உடன்பாடு எட்டாமல் தனித்துப்போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்ட பின்னர்பா.ஜ.க விதர்ப்ப தேசப் பிரிவினைக்கானதனது ஆதரவைத் தீவிரப்படுத்தியது.
குஜராத்திடம் மண்டியிட்ட மராத்தி
தேர்தலின் போது எதிரும் புதிருமாக நின்று போட்டியிட்ட பாஜகவிற்கும் சிவசேனாவிற்கும் இடையில் மீண்டும் இணைந்து ஆட்சி அமைப்பது பற்றிய பேச்சு வார்த்தை ஆரம்பித்தவுடன் குஜராத்திடம் மண்டியிட்ட மராத்தி என சிவ சேனாவின் எதிரிகள் விமர்சிக்கத் தொடங்கிவிட்டார்கள். மும்பாயில் குஜராத்தியர்கள் பலர் உயர் பதவிகளிலும் வர்த்தகத்திலும் இருக்கின்றார்கள். இதை சிவசேனா விரும்பவில்லை. மோடியும் ஒரு குஜராத்தியர் என்பதால் பாஜகவிற்கும் சிவசேனாவிற்கும் இடையில் விரோதம்மேலும் மோசமடைந்துள்ளது.
விதர்ப்ப தேசத்துப் பார்ப்பனர் மஹாராஸ்ட்ராவின் முதலமைச்சர்
இந்தியாவிலேயே அதிக அளவு விவசாயிகள் தற்கொலை செய்யும் பிரதேசமாக விதர்ப்பதேசம் இருக்கின்றது. விதர்ப்ப தேசத்தைச் சேர்ந்தநிதின் கட்காரி பாரதிய ஜனதாக் கட்சியின் முன்னாள் தலைவரும் தற்போது இந்திய மைய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராகப் பணி புரிகின்றார்.இது போதாது என்று மஹாராஸ்ட்ரா சட்ட மன்றத்தின் முதலமைச்சராக விதர்ப்ப தேசத்துப் பார்ப்பனரான தேவேந்திர பட்னவீஸ் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். சிவசேனையைப் பொறுத்தவரை வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போலாகும்.
பிந்திச் சென்ற பதவியேற்பு வைபவம்
2014-ம் ஆண்டு ஒக்டோபர் 31-ம் திகதி பாரதிய ஜனதாக் கட்சியின் தேவேந்திரப் பட்னவீஸ் மிகவும் ஆடம்பரமாக மஹாராஸ்ட்ராவின் முதலமைச்சராகப் பதவி ஏற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் தாமும் பங்கேற்கப் போவதாக சிவசேனா அறிவித்தது. புதிய முதல்வருக்கு சிவசேனாவின் பத்திரிகை ஆலோசனையும் வழங்கியுள்ளது. பஜகாவின் முதல்வரும் மஹாராஸ்ட்ரா மக்களும் மருமகளும்மாமியும் போன்றவர்கள். திருமணத்தில் அன்றுஅன்பாகத்தான் இருப்பார்கள். ஆனால் பின்புமருமகள் தவறு செய்தால் மாமியார் மருமகளின் காதைப் பிடித்து முறுக்குவார் என்கின்றது சிவசேனனவின் ஊடகம். சிவசேனாமஹாராஸ்ட்ராவைப் பொறுத்தவரை ஒருசண்டியர் கும்பல் எனச் சொல்லலாம். சிவசேனாவை ஆட்சியில் இணைக்காமல் வெளியில் எதிர்க் கட்சியாக விடுவது ஆபத்துஎன்பதை பாரதிய ஜனதாக் கட்சியினர் நன்குஅறிவர். இதனால் இருதரப்பினருக்கும் இடையில் உடன்பாடு ஏற்படுத்தும் பேச்சு வார்த்தைகள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றது. பாரதிய ஜனதாக் கட்சியினர் தாம் ஒரு தேசியக் கட்சி என்றும் சிவசேனா ஒரு பிராந்தியக் கட்சி என்றும் தமது நிகழ்ச்சி நிரலுக்குசிவசேனா உடன்பட்டு வர வேண்டும் என்றநிலைப்பாட்டில் உள்ளனர். ஆனால் சிவசேனாமஹராஸ்ட்ரா நம்ம `ஏரியா’ இதனுள் எம்முடன்மோதவேண்டாம் என்ற நிலைப்பாட்டில் உள்ளது. இது இந்தியாவின் பேரினவாதிகளுக்கும் பிராந்தியவாதிகளுக்கும் இடையில்உள்ள முறுகல் நிலையாகும். இதே மாதிரியானமுறுகல் நிலை தமிழ் நாட்டிலும் உண்டு. மஹாராஸ்ட்ரா அமைச்சரவையில் மூன்றில் ஒருபங்கு பிரதிநிதித்துவம் கொடுத்தால் சிவசேனாஉடன்பட்டு வரும் எனத் தெரியவருகின்றது.பிரதி முதலவர், உள்துறை, வலுத்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை ஆகிய அமைச்சுப் பதவிகளை சிவசேனா தமது கட்சியினருக்குத் தரும்படி கேட்கின்றது.
மாநிலங்களைப் பிடிக்க நீண்ட தூரம்
காங்கிரசு ஆட்சியில் பெரும் தொல்லையாகஇருந்த உலகச் சந்தையில் எரிபொருள் விலைஅதிகரிப்பு தற்போது தலைகீழாக மாறிவிட்டது. உலகச் சந்தையில் எரிபொருள் விலைகள் அடையும் வீழ்ச்சி மோடியில் ஆட்சிக்கு பெரும்வாய்ப்பாக உள்ளது. பாஜக ஆட்சியின் கீழ் தற்போது மஹாராஸ்ட்ரா, ஹரியானா, குஜராத், ராஜஸ்த்தான், மத்தியப் பிரதேசம் ஆகியமாநிலங்களும் கோவா என்னும் ஒன்றியப் பிரதேசமும் இருக்கின்றன. இவற்றின் பொருளாதார உற்பத்தி இந்தியாவின் மொத்தப் பொருளாதார உற்பத்தியின் 37 விழுக்காடாகும். இதைவைத்துக் கொண்டும் சில மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் ஒத்துழைக்கக் கூடிய பிராந்தியக்கட்சிகளின் ஆதரவுடனும் நரேந்திர மோடியால்தனது பொருளாதாரத் திட்டங்களையும் சீர்திருத்தங்களையும் முன்னெடுக்க முடியும்.
Picture courtesy – deccanchronicle.com