வல்லாதிக்க நாடுகளின் பிடியிலிருக்கும் ஒரு தேசிய இனத்தின் விடுதலை கையில் இருக்கும் சர்க்கரை போல எளிமையானதாக எப்பாேதும் இருப்பதில்லை.
மக்கள் சமூகத்தை பிளவுபடுத்துகிற வழமையான வல்லாதிக்கங்களின் உத்திகளை உடைத்து ஒர்மம் பெற்ற மக்கள்திரளாக ஒன்றிணைவதில் இருந்துதான் விடுதலைக்கான பயணமே தொடங்குகின்றது.
இதில் விடுதலைக்கான புறச்சூழல், சந்தர்ப்பங்கள், அரசியல் நகர்வுகள் என்பனவற்றை கடந்து விடுதலைக்கு போராடுகின்ற இயக்கத்தின் உள்ளக பண்பாடும் மிக முக்கியமான பாத்திரமேற்கிறது.
ஒரு தேசிய இனத்தின் விடுதலை என்பது போகிறபோக்கில் பெற்றுவிடக்கூடிய ஒன்றல்ல… அதற்கு தன்னளவில் முதலில் அந்த தேசிய இனம் தயாராக வேண்டும் இதைத்தான் நாம் “உள்ளக பண்பாடு” என்கிறோம்.
இந்தப்பண்பாடு தான் ஒரு விடுதலை இயக்கத்தின் அடிநாதம். தொடர்ந்த நீடித்த பயணத்திட்டத்தில் இந்த பண்பாடு தான் இயக்கத்தின் இலக்குமாறாத பயண ஒழுங்கை உறுதி செய்கிறது.
ஒரு தேசிய இனத்தின் விடுதலையை தனி மனிதர்களால் மட்டுமே நிகழ்த்தி விட முடியாது. அதற்கு ஒரு கூட்டியக்கத்தை கொண்ட ஒத்துழைப்புமிக்க மக்கள் திரள் தேவை.
இப்படியான திரளை விடுதலை இயக்க பண்பாட்டால் தான் உருவாக்க முடியும்.
சிக்கலான வார்த்தைகளில் சொல்வதை விடவும் ஒரு உதாரணம் சொல்கிறேன .
தமிழீழ விடுதலைப்புலிகளின் இத்தனை சாதனைகளுக்கும், தனியரசை கட்டியமைத்தற்கும், அவர்களது தாக்குதல் வலுவுக்கும் அடிப்படை காரணி அவர்கள் பொதுவான உளவியலிலிருந்து விடுபட்டு தனித்த விடுதலை இயக்க பண்பாட்டுக்குள் வாழ தலைப்பட்டது தான்.
அவர்கள் ஏற்றுக்கொண்ட தலைமறைவு வாழ்க்கையும், பூந்தோட்டம் பயிற்சி முகாமும் அவர்களை சாதாரண மக்களின் உளவியலான, வாழ்கை பற்றிய பயமிக்க யதார்த்த உளவியலின் தாக்கம் பாதிக்காதவாறு தற்காத்தது.
தம்மை போல ஒத்த சிந்தனை உடைய போர்குணமிக்க இயக்க உறுப்பினர்களின் புரட்சி உளவியலையே அவர்கள் உள்வாங்கவேண்டியதான நிலை ஏற்பட்டது.
இதுவே தான் அவர்களை யதார்த்த உளவியலில் இருந்து மாறுபட்ட உள்ளக கூட்டுச்சமூகமாக உருமாற வழிஅமைத்தது.
உண்மையில் இப்படியான யதார்த்த மனநிலையின் தாக்கத்தினாலேயே தான் ஈழத்தில் உருவான பல இயக்கங்கள் தமது நிலைப்பாட்டை தொடரமுடியாமல் போனது.
ஆக…சுயநலம், தன்முனைப்பு, போட்டி, ஒத்துழைப்பற்ற மனப்பாங்கு, கூட்டு உளவியலற்ற நிலை என்று வெறும் குறைகளை மட்டுமே காண்கின்ற யதார்த்த மனநிலையில் இருந்து ஒருபோதும் புரட்சியை உருவாக்க முடியாது… அதற்கென ஒரு தனியான விடுதலை பண்பாடு கட்டியெழுப்பப்பட வேண்டியது அவசியமாகிறது.
“அடிவாங்கு….நம்மால் எல்லாம் என்ன செய்ய முடியும்”…என்று பாசோதிப்பது யதார்த்த உளவியல்.
“நம்மை அடிக்க அவன் யார்” என கேள்வி கேட்க வைப்பது புரட்சிகர உளவியல்.
அப்படியான உளவியலை உருவாக்குகிற பண்பாட்டின் மேல் கட்டப்படுகிற இயக்கம் தான் உறுதியாக ஓர்மமாக இலக்கு நோக்கி நகரும்.
இந்த இனமும் அப்படியாயொரு பண்பாட்டை கட்டமைக்கும்…!!