Issue : 154
சிங்கள அரசியல் கட்சிகள் இனவாதத்தை வெளிப்படுத்துவது ஒன்றும் ஆச்சரியம் தரத்தக்க விடயமல்ல. இவ்விடயத்தில், மகிந்த இராஜபக்ச அரசாங்கம் பாரிய இனவழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு தமது பங்கை வெளிப்படுத்தியுள்ளது. இவற்றுக்கு மத்தியிலும் இனங்களுக்கிiயிலான நல்லிணக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது சாத்தியமானது என்ற கருத்து மேலைத்தேச அரசுகளுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளதெனில் அதற்கு கொழும்பின் மேட்டுக்குடியினர் முக்கிய காரணமாக அமைந்துள்ளனர்.
கொழும்பை மையப்படுத்திய கல்வியாளர்கள், தனவந்தர்கள், மதபீடாதிபதிகள் உள்ளிட்ட மேட்டுக்குடியினரே வெளிநாட்டு இராசதந்திர வட்டாரங்களுடனும், சர்வதேச மட்டத்தில் இயங்கும் செல்வாக்கு மிக்க அமைப்புகளுடனும் அன்றாடம் தொடர்பாடல்களை மேற்கொண்டு வருகின்றனர். தாராண்மைவாத கருத்துக் கொணடவர்கள்போல் தோற்றம் காட்டுவதும் மேற்கத்தையவர்களின் கலாச்சாரத்தை பின்பற்றுவதனாலும் இவர்களது கருத்துகள் மேற்படி வட்டாரங்களில் நம்பிக்கையுடன் உள்வாங்கப்படுகிறது.
மதபீடங்களைப்பொறுத்தவரை தனித்து கிறிஸ்தவ மதபீடங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இத்தகைய தொடர்பாடலகளை மேற்கொள்ளும் வாய்ப்புகளைக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக கொழும்பு ஆண்டகை போன்றவர்கள் அரசாங்க மட்டத்திலும், வெளியுலகிலும் செல்வாக்கு பெற்றவர்களாக விளங்குகிறார்கள்.
இந்தப்பின்னணியில், உரோமன் கத்தோலிக்க மதகுரு கொழும்பு அதிமேற்றிராணியார் மல்கம் ரஞ்சித் அவர்களுக்கும், கொழும்பிற்கான அமெரிக்கத் தூதுவர் பற்றிசீயா புற்றின் அமமையாருக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல்களாகக் குறிப்பிட்டு விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவல்களை அவதானிக்க வேண்டியுள்ளது. 2009ம் ஆண்டு ஒக்ரோபர் மாதத்தில் இடம்பெற்ற இந்த உரையாடல்களின்போது, மகிந்த இராஜபக்சவின் மீது எதுவித நடவடிக்கையும் எடுக்கவேண்டாம் என பற்றிசியாவை ரஞ்சித் கேட்டுக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேண்டுகோளுக்கு வலுச்சேர்க்கும் வகையில் மகிந்தவை ஒரு மனிதவுரிமை வாதியாகவும், வலதுசாரிக் கருத்துடைய பௌத்தர்களிலிருந்து மாறுபட்டவராகவும், அவரது மனைவி சிராந்தியை ஒரு கத்தோலிக்கராகவும் ரஞ்சித் சித்தரித்து மகிந்தவிற்கு ஆதரவாகப் பேசியுள்ளார் மகிந்தவின் ஆட்சி கலைக்கப்படும் நிலைவருமானால் இராணுவ ஆட்சி ஏற்பட்டுவிடும் என்றும் ஆருடம் கூறியுள்ளார்.
தமிழ் மக்கள் மீது நடாத்தப்படும் இனவழிப்பு நடவடிக்கைகiயிட்டு கொழும்பின் குடிசார் (சிவில்) சமூகத்தினர் பாராமுகமாக அல்ல பங்குதாரர்களாக இருக்கிறார்கள் என்பதனை விக்கிலீக்ஸ் வெளியீட்டிருக்கும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன.