யாழில் இராணுவத்தால் துப்பாக்கி சூடு; இளைஞன் படுகாயம்!
யாழ்ப்பாணம் – பருத்தித்துறை, மந்திகை பகுதியில் இன்று (15) அதிகாலை இராணுவம் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
காவல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த படை சிப்பாய் ஒருவரால் இன்று அதிகாலை 1 மணிக்கு குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான புலோலியைச் சேர்ந்த பசுபதி அனுசன் என்ற 22 வயது இளைஞன் கை மற்றும் காலில் துப்பாக்கி ரவை பாய்ந்த நிலையில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
மந்திகை வைத்தியசாலைக்கு முன்பாக காவல் கடமையில் ஈடுபட்டடிருந்த படைச் சிப்பாய் ஒருவர், இனந்தெரியாதோரால் தாக்கப்பட்டுள்ளார். அவரது கையில் கல்லடடிப்பட்டு காயமேற்பட்டுள்ளது. இதனால் தாக்குதல் நடத்தியோரைத் தேடி இராணுவத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த குறித்த இளைஞனை இராணுவத்தினர் இடைமறிக்கையில் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றதாகவும், இதன் காரணத்தால் தாம் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், தாக்குதலுக்கு இலக்காகிய இளைஞன் வீட்டுக்குச் சென்று அவசர உதவி அம்புலன்ஸ் சேவை ஊடாக மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.