கடந்த வருடம் மார்ச் மாதத்தில் நடந்த ஐ.நா. மனிதவுரிமைச் சபையின் இருபத்தைந்தாவது கூட்டத்தொடரில் அமெரிக்காவால் சமர்பிக்கப்பட்டு சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், ஐ.நா. மனிதவுரிமைச் சபையின்ஆணையாளரால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு தனது அறிக்கையை இம்மாதம் வெளியிடவுள்ளது. அந்த வகையில் செப்ரெம்பர் 14ம் திகதி ஆரம்பமாகும் ஜ.நா. மனிதவுரிமைச் சபையின் முப்பதாவது கூட்டத்தொடர் ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் மிகுந்த கவனத்திற்குரிய ஒரு நிகழ்வாகஅமையவுள்ளது. ஆறுமாத காலம் தாமதித்து வெளியிடப்படும் இவ்வறிக்கை பற்றியும், விசாரணைக்குழுவின் பரிந்துரைகள் பற்றியும் அறிந்து கொள்வதில் இலங்கைத்தீவின் அரசியலில் அக்கறை கொண்ட அனைவரும் ஆவலாக உள்ளார்கள்.
பாதிக்கப்பட்ட தமிழ் மக்களைப்பொறுத்தவரை, குறிப்பாக இவ்விசாரணைக்கு சாட்சியமளித்தவர்களைப் பொறுத்தவரை, வெளிவரவிருக்கும் அறிக்கை தாம் எதிர்பார்த்த நீதியைப் பெற்றுக்கொள்ள வழிகோலும் என்று எதிர்பார்க்கிறார்கள். தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுப்பவர்களில் பலர் இவ்வறிக்கையானது தமது அரசியல் நிலைப்பாட்டை சர்வதேச மட்டத்தில் நியாயப்படுத்தவதற்கு உதவும் என நம்புகிறார்கள். ஐ.நா. விசாரணையை ஏகாதிபத்திய நாடுகளின் நலன்பேணும் நடவடிக்கை என உதாசீனம் செய்பவர்களும் நம்மத்தியில் இருக்கிறார்கள். எனினும், இலகுவில் புறந்தள்ளிவிட முடியாதளவு முக்கியத்தும் பெற்ற அமைப்பாக ஜ.நா. மனிதவுரிமைச்சபை உள்ளது என்பதனை நாம் மறுக்க முடியாது. ஆகவே இவ்வறிக்கை தொடர்பாகவும் அதன் பின்னரானநகர்வுகளையிட்டும் தமிழ் மக்கள்அதிகம் கவனம்செலுத்த வேண்டியவர்களாகவும், அதையொட்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டியவர்களானவும் உள்ளனர்.
சிறிலங்கா ஏற்றுக்கொள்ளும் தீர்மானம்
பிரித்தானியா, மற்றும் அமெரிக்க இராஜதந்திரிகளுடன் தொடர்புடைய வட்டாரங்களிலிருந்து கிடைக்கப்பெற்ற நம்பகமான தகவல்களிலிருந்து, இலங்கைத்தீவு தொடர்பில் இக்கூட்டத்தொடரில் கொண்டுவரப்படவிருக்கும் தீர்மானம் முன்னைய தீர்மானங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டதாக அமையவுள்ளது. இம்முறை சிறிலங்கா அரசாங்கத்துடன் இணைந்து தயாரிக்கப்படும் ஒருதீர்மானம் கொண்டுவரப்படவிருக்கிறது.சிறிலங்காஅரசாங்கத்தின் சம்மதத்ததுடன் கொண்டுவரப்படும் ஒரு தீர்மானம் எதுவித எதிர்ப்பும் இன்றி நிறைவேற்றப்படும் என்பது ஒருபுறமிருக்க, இவ்வாறானதொரு ஒரு தீர்மானம் கனதியற்றதாகஅமையும் என்ற முடிவிற்கு யாரும் இலகுவில் வந்துவிட முடியும். இலங்கைத் தீவில் ஏற்பட்டிருக்கும் ஆட்சிமாற்றத்தினால் சிறிலங்கா விவகாரத்தில் திருப்தியுற்றிருக்கும் மேற்கத்தைய தரப்புகள் அவ்வரசாங்கத்தை ஸ்திரப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடுவதை விடுத்து அதனைப் பலவீனப்டுத்தும் எந்த நகர்வுகளிலும் ஈடுபடப்போவதில்லை என்ற அடிப்படையிலேயே நாம் இவ்விடயத்தை அணுகவேண்டியவர்களாக உள்ளோம். இத்தகைய புறச்சூழலில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிற்கான நீதி மேற்குலகின் நலனுக்காக பலியிடப்படப்போகிறதா என்பதே தமிழ் மக்கள் முன்னுள்ள கேள்வியாக இருக்கிறது.
குறித்த விசாரணை அறிக்கை அடுத்த வாரமளவில் சிறிலங்கா அரசாங்கத்திடம் கொடுக்கப்படவுள்ளது. சம்பந்தப்பட்ட நாடு என்ற வகையில் சிறிலங்காவிற்கு இவ்வறிக்கை முன்னதாகவே வழங்கப்பட்டாலும் மனிதவுரிமைச்சபையில் அங்கம் வகிக்கும் மற்றைய நாடுகளிற்கு தாமதமாக, அதாவது விவாதத்திற்கு எடுக்கப்படும் நாளிற்கு ஒருவாரமிருக்கும் நிலையில் வழங்கப்படவிருக்கிறது.இருப்பினும் சிறிலங்கா அரசாங்கம் தமக்கு கிடைக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் விபரங்களை பிரித்தானியா, அமெரிக்கா மற்றும் மேற்கத்தைய நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளும் எனஎதிர்பார்க்கப்படுகிறது. இதனடிப்படையில் வரையப்படும் தீர்மானம் செப்ரெம்பர் 30ம் திகதிமனிதவுரிமைச் சபையில் விவாதிக்கப்படவிருக்கிறது. கடந்த முறை கொண்டுவரப்பட்ட அமெரிக்கத் தீர்மானத்திற்கு கூட்டாக இணங்கியிருந்த பிரித்தானியா, மொரிசியஸ், மொன்ரனிகரோ, மசிடோனியா ஆகிய நாடுகளுடன் சிறிலங்காவும் இணைந்து இத்தீர்மானம் கொண்டுவரப்படவிருக்கிறது.
உள்ளகப் பொறிமுறை
வெளிவரவிருக்கும் அறிக்கை காத்திரமானதாக அமையும் என்ற ஊகங்கள் பல்வேறு தரப்புகளால் வெளியிடப்படுகின்றன. ஆனால் அறிக்கைதொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை எவ்வாறு அமையப்போகிறது என்பதிலேயே அறிக்கையின் பயன்பாடு தங்கியிருக்கிறது. அண்மையில் இலங்கைக்கு பயணம் செய்திருந்த அமெரிக்க உதவிவெளியுறவுச் செயலர்கள் நிஷா தேசாய் பிஸ்வால், ரொம் மலினொவ்ஸ்கி ஆகியோர் வெளியிட்டகருத்துகளிலிருந்து, ஒரு உள்ளகப் பொறிமுறையூடாக நீதி விசாரணை நடைபெறுவதனையே அமெரிக்கா பரிந்துரைக்க விரும்புவதாகத் தெரியவருகிறது. இவ்விடயத்தில் பிரித்தானியாவும்இணங்கியுள்ளதனை பிரித்தானிய வெளியுறவுத்திணைக்கள அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
சர்வதேச சுயாதீன விசாரணை என்ற விடயத்தை தமிழ்த் தரப்புகள் வலியுறுத்தி வந்துள்ளபோதிலும்,அவ்வப்போது நம்பகமான விசாரணை (ஷசுக்க்ஷகூஸஙீக் கூஙூஞீக்சூஞ்கூகீஹகூச்ஙூ) என்ற பதத்தினையே வெளித்தரப்புகள் பாவித்து வந்தன. சர்வதேச உறவுகள் விடயத்தில் பாவிக்கப்படும் ஒவ்வொரு சொற்களும் அரசியல் முக்கியத்துமுடையவை என்பதனால் இச்சொற்கள் பயன்படுத்தப்பட்டமைக்கு காரணமிருக்கிறது. சிறிலங்காவில் நடைபெறப்போகும் விசாரணை ஜ.நா. வின் தொழினுட்ப உதவியுடன் `நம்பகமான விசாரணையாக’ அமையவேண்டும் என்பதனையே தற்போது அமெரிக்க – பிரித்தானிய அரசதரப்புகள் வலியுறுத்த உள்ளன. நம்பகத்தன்மையுடைய உள்ளகப் பொறிமுறை எவ்வாறிருக்க வேண்டும்என்பதற்கு பிரித்தானிய வெளியுறவுத் திணைக்களஅதிகாரிகள் வழங்கிய விளக்கம் இவ்வாறிருந்தது.
[tie_list type=”checklist”]பாதிக்கப்பட்ட தரப்புகளுடனும், இவ்விடயத்தில் தொடர்புடைய ஐ.நா. உட்பட மற்றைய தரப்புகளுடனும் கலந்தாலோசித்து ஆலோசனை பெறுதல் [/tie_list]
[tie_list type=”checklist”]அடையாளப்படுத்தப்பட்ட இலக்குகளை (bench mark) கொண்டதாக இருத்தல்[/tie_list]
[tie_list type=”checklist”]தொடர் கண்காணிப்புக்குரிய பொறிமுறையைக் (follow up mechanism) கொண்டிருத்தல்[/tie_list]
மேற்குறித்த மூன்றுவிடயங்களும் அடங்கியுள்ளதாகக் கருதப்படும் ஒரு விசாரணைப்பொறிமுறையினை நம்பகமான பொறிமுறையாக மேற்குலகத்தரப்புகள் ஏற்றுக்கொள்ளும் என எதிர்பார்க்கலாம்.
தமிழர்தரப்பின் நிலைப்பாடு
மேற்குலகத்தினால் ஏற்றுக்கொள்ளப்படும் உள்ளகப்பொறிமுறையினாலான விசாரணைகள நடாத்துவதற்கு சிங்களத் தேசியவாதிகள் எதிர்ப்புக்காட்டிவருகிறார்கள். ஆகவே அவர்களைத் திருப்திப்படுத்த நாட்டினைக் காத்த தேசிய வீரர்களுக்கு தாம் துரோகமிழைக்கப் போவதில்லைஎன்ற உத்தரவாதத்தை சிறிலங்கா அரசாங்கத்தரப்பினர் வழங்கி வருகின்றனர். இந்நிலையில்தமிழ்த்தரப்பினரின் நிலைப்பாடு வெளித்தரப்புகளால் கூர்ந்து அவதானிக்கப்படுகிறது. துரதிர்ஸ்டவசமாக, தமிழ்த் தரப்புகள் அனைத்தும் ஒத்தநிலைப்பாட்டினைக் கொண்டிருக்கவில்லை என்பதனை வெளித்தரப்புகள் அறிந்து வைத்திருக்கின்றன. குறிப்பாக தேர்தல்காலங்களில் ஒற்றுமையைவலியுறுத்தும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதனது வெளிநாட்டுக் கிளைகள் போன்று செயற்படும் உலகத் தமிழர் பேரவை, கனேடிய தமிழ்கொங்கிரஸ் போன்ற புலம்பெயர் அமைப்புகளும் தாம் உள்ளகப்பொறிமுறையை ஏற்றுக்கொள்ளத் தயாராகவுள்ளதனை ஏற்கனவே அமெரிக்க, பிரித்தானிய வெளியியுறவு துறையினருக்கு தெரிவித்துள்ளன. சர்வதேச நீதிவிசாரணை வேண்டும் என்றகருத்தில் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழரசுக்கட்சி தவிர்ந்த ஏனைய மூன்று கட்சிகளும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ்சிவில் சமூக அமையம் மற்றும் பெரும்பான்மையான புலம்பெயர் தமிழ் அமைப்புகளும் உறுதியாகவுள்ள போதிலும், தமிழரசுக்கட்சி மேற்கத்தைய தரப்புகள் பரிந்துரைக்கும் எத்தகைய விசாரணைப் பொறிமுறைக்கும் ஆதரவு தெரிவிப்பதற்கு உடன்பட்டுள்ளது. அவர்களது தேர்தல் விஞ்ஞாபனத்திலும் இவ்விடயம் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
“ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில்மார்ச் 2012, மார்ச் 2013, மார்ச் 2014 இல் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் பரிந்துரைகளதும், மார்ச்2014 இன் தீர்மானத்தால் அங்கீகாரம் பெற்று எதிர்வரும் செப்டம்பர் மாதம் வெளியிடப்படவிருக்கும் சர்வதேச விசாரணை அறிக்கையினது பரிந்துரைகளதும் முழுமையான நடைமுறையாக்கலை நாம் வலியுறுத்துகின்றோம்.”
தேர்தல் விஞ்ஞாபனத்தில் எந்த இடத்திலும் சர்வதேச விசாரணைப் பொறிமுறை பற்றிக் குறிப்பிடப்படவில்லை என்பது கவனத்திற்குரியது. ஆகவே மாவை சேனாதிராசா போன்றவர்கள் சர்வதேச நீதிமன்ற விசாரணை பற்றிப் பேசும்போது தாம் என்னபேசுகிறோம் என்பதனை அறியாமலே இவை பற்றிக் கூறிவருகிறார்கள் என்பது புலனாகிறது.
பாதிக்கப்பட்ட தரப்பு என்றவகையில் தமிழ்மக்களுக்கு தமக்கான நீதியைக் கோரும் உரிமையுள்ளது. அதனை மற்றவர்கள் ஏற்றுகொள்வார்களோ இல்லையோ என்பது ஒருபுறமிருக்க, தமிழ் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகளே அதற்கு இடமில்லாமல் செய்துவிடுவார்களோ என்று அச்சப்படவேண்டியுள்ளது. இத்தகைய சூழலில் சர்வதேசநீதி சறுக்கிவிடுவதற்கான சந்தர்ப்பம் அதிகமாகவுள்ளது.