2002-ம் ஆண்டு பிரபாகரன் அவர்களை “உங்கள் பிள்ளைகளை ஆயுதம் ஏந்தும் போர்க்களத்திற்கு அனுமதிப்பீர்களா?” எனக் கேட்ட கேள்விக்குப் பதில்:
“அதற்குரிய வயதாகிறபோது அம்முடிவை அவர்களே எடுப்பார்கள்!
உண்மையில் இயக்கத்தின் எல்லா போராளிகளையும் என் சொந்த பிள்ளைகளைப் போலவே நான் உணர்ந்து நடத்தி வருகிறேன்.
போராளிகளுக்கும், என் பிள்ளைகளுக்குமிடையே நான் எவ்வித வேறுபாட்டையும் பார்ப்பதில்லை” என்றார்.
அவரது மகன் 24 வயதே ஆன #சார்லஸ்_ஆன்டணி மே 18-ந் தேதியன்று களத்தில் வீரமரணம் அடைந்தார்.
மகள் #துவாரகா – 22 வயதே ஆன அவரது மகள் துவாரகாவும் அதே மே-18-ம் தேதியன்று களத்தில் வீர மரணம் அடைந்தார்!
சார்ல்ஸ் ஆன்டணி என தன் முதல் குழந்தைக்கு பிரபாகரன் பெயர் சூட்ட காரணங்கள் உண்டு.
1983 ஏப்ரல் வரை இந்தியாவில் தலைவர் பிரபாகரனோடு இருந்த அவரின் நம்பிக் கைக்கும் நேசத்திற்குமுரிய மூத்த போராளி சார்லஸ் ஆன்டணி.
இந்தியாவிலிருந்து தமிழீழம் திரும்பிய பின் இராணுவத்துடன் நடந்த மோதலில் சார்ல்ஸுக்கு காலில் குண்டடி பட்டுவிடுகிறது. தப்பி ஓட முடியாத நிலை.
அது புலிகளிடம் ஆயுதங்கள் அதிகமாக இல்லாத காலம்.
தன் சக போராளிகளிடம் “என்னை சுட்டுக்கொன்றுவிட்டு ஆயுதத்தைப் பாதுகாப்பாக எடுத்துச் செல்லுங்கள்” என ஓர் தளபதியாக உத்தரவிட்டு வீரமரணம் தழுவிய நாயகன் சார்லஸ் ஆன்டணி.
அவனது நினைவாகவே தன் மகனுக்கும் அப்பெயரை சூட்டினார் பிரபாகரன்.
தலைவனின் மகனென்று ஒருபோதும் தன்னை காட்டிக் கொள்ளாத குழந்தை சார்லஸ் ஆன்டணி.
படித்தது யாழ்ப்பாணம் செயிண்ட் ஜான்ஸ் பள்ளியில். படிப்பில் படு கெட்டிக்காரன்!
பண்பில் அப்படியொரு பணிவும் சாந்தமும் உடையவன் என கற்றுக் கொடுத்த ஆசிரியர்கள் கூறுவர்!
வருவதும் போவதும் எவருக்கும் பெரிதாகத் தெரியாமல் யாழ்ப்பாணத்தின் ஒரு சாதாரண மாணவனாகவே சார்ல்ஸ் ஆன்டனி அப்பள்ளியில் படித்திருக்கிறார்.
அவர் விமானம் ஓட்டக் கற்றுக் கொண்டதும் வன்னிக் காடுகளில் தானேயன்றி வெளிநாட்டில் அல்ல.
அவரைப்பற்றி நான் உரையாடிய அத்தனை தளபதிகளும் கூறினர். தலைவரின் முதல்மகன் என்பதால் தளபதிமார் அத்தனை பேருக்கும் சார்லஸ் செல்லம்.
எவரையும் காயப்படுத்தாத, எவரிடமும் ஆணவமோ அதிகாரமோ காட்டாத, எல்லோரிடத்தும் “அப்பா, மாமா, அண்ணே… “ என்று குழைந்து திரியும் குழந்தை என்றே நான் பேசிய அத்தனைபேரும் சார்லஸை கொண்டாடினார்கள்.
துவாரகா அமைதியான பிள்ளை. தெய்வீக ரோஜாபோல் எப்போதும் கள்ளமில்லா வெள்ளை முகம். “எனது தேவதை இந்தப் பிள்ளை” என கடவுளே கனிந்துருகக்கூடிய அன்புள்ளம் கொண்ட அருட்கொழுந்து துவாரகா என்கிறார்கள்.
அயர்லாந்து டப்ளின் நகரில் மருத்துவ பட்ட மேற்படிப்பு முடித்துவிட்டு, அங்கே தங்கி விடாமல் தமிழீழ மண்ணுக்குத் திரும்பி மாலதி படையணியில் நின்று களமாடினார்.
முல்லைத்தீவு இறுதி முற்றுகையின்போதும் கலங்காத காரிகையாய் அதே மாலதிப் படையணியில் முன்னணிப் போராளியாய் நின்று களமாடிய என் இனத்தின் காவியம் துவாரகா. எழுதும்போதே கண்கள் பனிக்கின்றன.
எங்கள் ப்ரியமான சிறு தெய்வங்களில் ஒன்றாகிவிட்ட துவாரகா…
எவருக்கும் தெரியாமல் வன்னிக் காடுகளுக்குள் பூக்கள் மலரும் காலம்வரை…
முல்லைத்தீவு கடல்வெளியில் மௌனமாய் காற்றுவீசும் காலம்வரை உன் நினைவுகளும் உயிராய்…
உணர்வாய் …
அவற்றையும் கடந்த தெய்வீகத் தேடலாய் …
எம்மிடையே நிற்கும்.!
உண்மையில் கிளிநொச்சி எதிரியின் கையில் விழுந்தபின் சார்லஸ் சிறப்பு அதிரடிப் பிரிவொன்றின் அங்கமாய் புல்மொட்டை காட்டுப் பகுதிக்குள்தான் நகர்ந்து நின்றிருக்கிறார்.
ஆனால் முல்லைத்தீவு முற்றுகை இறுகிக்கொண்டே வர, விடுதலைப் போராட்டம் பாதுகாக்கப்படவேண்டுமென்றால் தலைவர் களத்தைவிட்டு அகலவேண்டுமென்று தளபதியர்கள் முடிவெடுத்தபோது அதை ஏற்க மறுத்தார் பிரபாகரன்.
“என்னை நம்பி வந்த மக்களையும் போராளிகளையும் விட்டுவிட்டு நகர மாட்டேன்” என்பதில் பிடிவாதமாயிருந்திருக்கிறார்.
தமிழுலகே, இப்படியோர் அப்பழுக்கில்லா உன்னதம் உலகில் வேறெந்த விடுதலை இயக்கமும் கண்டிருக்கவில்லையென உரத்துச் சொல்! மதர்ப்புடன் பெருமிதம் கொள்!
மே 18. அதிகாலை 2 மணிக்கு முள்ளிவாய்க்கால் கடற்பரப்பில் இறுதி யுத்தம் தொடங்கியது.
சிறப்பு படையணியில் சார்லஸும், மாலதி படையணியில் துவாரகாவும் நின்று களமாடினார்கள்.
மே-18-ம் தேதியன்று களத்தில் சார்லஸும் , துவாரகாவும் வீரமரணம் அடைந்தார்கள்.
விடுதலைப்புலிகள் அமைப்பில் பல கட்டுபாடுகளும் ஒழுங்கங்களும் கண்டிப்புகள் இருந்தமையால் உலகம் வியக்கும் தமிழீழ மரபியல் இராணுவமாக வளர்ந்தது யாவரும் அறிந்த விடயம்!
எம் அமைப்பில் சில தவறுகளுக்கு முன்னுதாரணமாகவும் இனிமேல் அந்த பிழைகள் ஏற்படாதவாறு திருத்திக் கொள்ளப்படவும் சில தண்டனைகள் வழங்குவது வழமை!
பொறுப்பாளரால் சில தண்டனைகளை வழங்குவதும் குறும்புத் தனத்துடன் போராளிகள் செய்து முடிக்கும் நிகழ்வும் ஓர் சுவாரஸ்யம் அதை அனுபவித்தவர்கள் மனங்கள் இதை படிக்கும் போது சில ஞாபகங்கள் வரலாம் ….
அப்படியாக ஓர் சம்பவத்தை பகிர்கிறேன்….
இம்ரான் பாண்டியன் படையணியில் ( பாதுகாப்பு பிரிவில் ) இருந்து கடற்புலி பாசறைக்கு சில பயிற்சிகளுக்காக சில போராளிகள் அதில் கணணிப்பிரிவிற்கு பொறுப்பான தீபன் மற்றும் 2000ம் ஆண்டு அப்பாச்சி கனரக ஆயுதத்தால் டோறா அடித்த தமிழரசன், மணிவண்ணன் உட்பட பல போராளிகளுடன் சாள்ஸ் கூட வந்திருந்தார்.
அதிலிருந்த போராளிகளுக்கு சாள்ஸ்சும் மிக நீண்ட நாள் நெருக்கம்….
நீச்சல், மற்றும் இயந்திரங்கள் என நீடித்த பயிற்சிகள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அப்போது கடல்சார் சண்டைப்படகு இயந்திரத்தை கற்பிக்கும் பொறுப்பு விமல் மாஸ்ரரிடம் வழங்கப்பட்டது. அவரும் தன் கடமையை செய்தார். இயந்திரத்தை கற்பித்து அதை ஒரு நாள் முழுவதும் எல்லோரும் ஓட்டிப் பார்த்து “உங்களுக்கு தெரியாத விடயங்களை பின்பு கேளுங்கள் பின்பு கரையில் படகு ஏறியவுடன் நன்னீரில் இயந்திரத்தை சுத்திகரித்து விட்டு விடுங்கள் அல்லது உப்பு பிடிக்கும்!” என கூறிவிட்டுச் சென்றார்.
இவர்களும் கடலில் ஓட்டிப் பார்த்து மாலை ஆனதும் படகு கரையில் ஏற்றப்பட்டு இவர்களின் கொட்டிலுக்கு அண்மையில் விடப்பட்டது. இவர்கள் நன்னீரில் இயந்திரத்தை சுத்திகரிக்க மறந்து விட்டார்கள். அது இயந்திரத்தின் மேல் பாகங்கள் உப்பு படிந்து இருந்தன. ( பெற்றொல் இயந்திரம் என்பதால் அவதானம் மிக முக்கியம் – தொடர் இலத்திரனியல் இணைப்புக்கள் உள்ளமையால் )
அன்று நடந்த தவறுக்கு…. நீண்ட நாளின் பின் கடலில் என்பதினாலும் கடல்காற்றின் சுவாசமும் கடலில் இருந்து கரை ஏறினால் சூடு மணலின் வாட்டும் வெயிலின் உடல் களைப்பு அடைய செய்தமையும், கடல்நீரில் விழுந்து குளித்து எழும்பி வந்தமையும் அது மேலும் பசியை அதிகரித்தமையுமே காரணமாக உழலில் மேலும் களைப்பை அதிகரித்து சோர்வடைய செய்தது …..
விமல் மாஸ்ரர் வந்து இயந்திரத்தை பார்த்தது விட்டு அனைவரையும் அழைத்து அவர்களின் பிழைகளை கூறினார். பின் இயந்திரத்துக்கு அதனால் ஏற்படும் விளைவுகளை விளங்கபடுத்தினார்.
பின்பு தங்கள் செய்த பிழைக்கு என்ன தண்டனை செய்ய என அனைவரும் ஒருமித்து கேட்டார்கள்.
இயந்திரத்தில் படிந்த உப்பை நாவினால் தொட்டுக்கொள்ளவும் என கூறினார்.
பின்பு ஒருவர் பின் ஒருவராக அணிவகுத்து ஒவ்வொருவராக செல்லும் வேளை சாள்ஸ்சும் இடையில் நின்றார்.
அதைப் பார்த்த விமல் மாஸ்ரர் “சாள்ஸ் நீங்கள் இங்கு வாருங்கள்!” என அழைக்க… சாள்ஸ்சும் சென்றார்.
“நீங்கள் வேண்டாம்!”எனக் கூறினார்.
“மன்னிக்கவும், நானும் அந்தத் தவறுக்கு உரியவன்! நானும் அந்த தண்டனையை ஏற்றுக்கொள்ள வேண்டும்!” என்றான்.
“வேண்டாம்…. சொன்னாக் கேளுங்கள்!” என்றார் விமல் மாஸ்ரர்.
அப்போது சாள்ஸ் “அப்படியானால் அவர்களுக்கும் ஏன் தண்டனை வழங்கப்படுகிறது…? “ எனக் கேட்க மெளனமாக இருந்தார் விமல் மாஸ்ரர்….
ஏனைய நண்பர்கள் போல் பழகிக் கூட வந்த போராளிகள் ” தம்பி ” என்றுதான் செல்லமாக அழைப்பர் சாள்ஸை. காரணம் ஓரிரு வயது குறைந்தவன் சாள்ஸ்.
“தம்பி நீ இரு! நாங்கள் செய்கிறோம்!” என்றனர்.
“நான் தண்டனை செய்யாமல் இருந்தால் அப்பா கூட என்னை மன்னிக்கமாட்டார். தண்டனையில் எனக்கும் பங்கு இருக்கு! ஆதலால் நானும் சென்று தண்டனையைப் பெறுவேன்!” என வழங்கபட்ட தண்டனையை அவனும் ஒருவனாய் ஏற்றான்…
பின் தண்டனை முடிந்து இயந்திரத்தை சுத்திகரித்து கையளித்தார்கள் அனைவரும்….
மீண்டும் ஒரு நாள் கழித்து வந்த போராளிகளுடன் தன் பாசறை நோக்கி பறந்து சென்றான்.
“இதுதானா தேசியத்தலைவர் புதல்வன் ?”
என கடற்புலிகள் போராளிகள் மத்தியில் பேச்சுக்கள் அந்த வட்டுவாகல் முதல் சாலை வரை உலாவந்தன… …..
– இசைவழுதி _