இணுவில் தியேட்டர் ஒழுங்கைப் பகுதியில் தங்கியிருந்த இந்திய புடவை வியாபாரிக்கு கொரோன தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து அவர் சென்று வந்த வீடுகளில் இருந்தவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என வடக்குமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இந்தியப் புடவை வியாபாரி இணுவிலில் தங்கியிருந்துள்ளார். அவர் அந்தப் பகுதியில் உள்ள மூன்று வீடுகளுக்கு சென்றுவந்துள்ளதுடன் ஏழாலைப் பகுதியில் உள்ள வீட்டுக்கு சென்றுள்ளார். இதையடுத்து அந்த வீட்டில் உள்ளவர்களையும் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளோம் அவர்களுக்கு இன்று அல்லது நாளை PCR பரிசோதனை இடம்பெறவுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இங்கு 4 பேர் தங்கியிருந்துள்ளனர். இவர்களில் ஒருவர் ஏப்ரல் 7 ஆம் திகதி திடீரென உயிரிழந்துள்ளார். அவருக்கு மூளையில் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாகவே உயிரிழந்தார் என உடற்கூற்று பரிசோதனையில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இலங்கையில் சிக்கியுள்ள இந்தியர்களை அழைத்து செல்ல வந்த கப்பலில் இணுவிலில் தங்கியிருந்த மூன்று இந்தியர்களும் சென்றனர். மே மாதம் 31 ஆம் திகதி யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்று 1 ஆம் திகதி இந்திய கடற்படையினரின் கப்பலில் கொழும்பு துறைமுகத்தின் ஊடாக இந்தியாவின் தூத்துக்குடி நோக்கிச் சென்றனர்.