யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் உயிரிழந்த பின்னரும், எட்டுப் பேரை காப்பாற்றியுள்ளார். அவரது உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்பட்டு, உயிரிழக்கும் தறுவாயிலிருந்தவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
தெல்லிப்பழையை சேர்ந்த பகீஸ்வரன் சாருஜன் (29) என்பவரே கடந்த 15 ம் திகதி உயிரிழந்துள்ளார்.
சில தினங்களின் முன்னர் அவர் திடீரென மயக்கமடைந்துள்ளார். அவரை உடனடியாக வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று, அதீதீவிர சிகிச்சையளிக்கப்பட்டது. எனினும், அவரது மூளைசாவடைந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
வைத்தியர்கள் பகீரதப் பிரயத்தனம் செய்தும், அவரை காப்பாற்ற முடியாதென்ற நிலையேற்பட்டபோது, உறவினர்களின் சம்மதத்துடன் அவர் கருணைக் கொலை செய்யப்பட்டார். தனது உடல் உறுப்புக்களை தானம் செய்ய வேண்டுமென அவர் தனது விருப்பத்தை ஏற்கனவே வெளிப்படுத்தியதன் அடிப்படையில், அவர் உயிரிழப்பதற்கு முன்னதாக அவரது உடல் பாகங்கள் தானம் செய்ய முடிவெடுக்கப்பட்டது.

இதன்படி, இதயம் மற்றும் ஈரல் பிரச்சனைகளால் உயிரிழக்கும் தறுவாயில் இரண்டு நோயாளர்கள் இருக்கும் விடயம் தெரியவரவே, அவர்களிற்கு அந்த பாகங்கள் தானம் வழங்கப்பட்டன. விசேட உலங்குவானூர்தி மூலமாக, இதயம் கொண்டு செல்லப்பட்டு அந்த நோயாளிக்கு மாற்றப்பட்டது.
இதயம், ஈரல் மாற்றப்பட்ட பிரான்ஸ் நாட்டவர்கள் உயிர்பிழைத்தனர்.
இதயம், ஈரல், நுரையீரல், பித்தப்பை, சிறுநீரகம், விழித்திரை உள்ளிட்ட எட்டு உடல் பாகங்களை சாருஜன் தானம் செய்திருந்தார்.