முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமமான ஒதியமலை தனிக்கல் கிராமத்தில் விவசாயிகள் எதிர்கொள்ளும் காணி பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான செ.கஜேந்திரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் நேற்று முன்தினம் (11) நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்கள்.
நாடாளுமன்ற தேர்தலின் பின்னர் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக, முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமமான ஒதியமலை கிராமத்துக்குப் பயணம் மேற்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், வாக்களித்த மக்களைப் பார்வையிட்டுள்ளதுடன், விவசாயிகள் எதிர்கொள்ளும் காணிப் பிரச்சினை தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டுள்ளார்கள்.
விவசாய நிலங்களைப் பயன்படுத்த படையினர் தடையாக இருப்பதாக விவசாயிகள் முறையிட்டுள்ளார்கள். இந்தக் காணிகள் மகாவலி எல் வலயத்துக்குள் சுவீகரிக்கப்பட்டுள்ளன.அதன் காரணமாக, இந்த நெருக்கடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்த விவசாயிகள், காணியில் விவசாயம் செய்யும் போது, காணி உறுதி பத்திரங்களை காட்டுமாறு படையினர் கேட்டுள்ளதாகவும் கூறினர்.விவசாய காணியில் செய்கை பண்ண முடியாத நிலைக்கு அச்சறுத்தல்களுக்கு தாம் உள்ளாகியுள்ளதாகவும், எல்லை கிராம விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள்.