அந்த நிலத்தில் நின்று கருவுற்றதற்காக
ஒரு பெரும் தண்டனையை
திணித்திருக்கிறீர்கள்
அந்த நிலத்தின் மீது நாங்கள் கொண்ட நேசத்திற்காக
கருவறைகளுக்குள் கத்தி பாச்சுகிறீர்கள்
அந்த நிலத்தில் நாங்கள் நடந்ததற்காக
எங்கள் விலைமதிப்பற்ற மானத்தை
தாரைவார்க்கப் பணிக்கிறீர்கள்
உங்கள் சுயலாபங்களை
உங்கள் பகட்டு அரசியலை
உங்கள் பாழ்பட்ட தேசத்தின் இறையாண்மையை
எங்கள் கண்ணீர் ஊற்றி வளர்க்கிறீர்கள்
பாவங்களின் மேட்டில்
அமர்ந்தபடி நீங்கள்
உங்களை உயரத்தில் வைத்ததாய்
எண்ணலாம்
ஆனால் சாபங்களின் புதைகுழி
உங்களை ஒருபோதும்
தவறவிடப்போவதில்லை
அதர்மிகளே……!