தமிழ் சமூகத்தை தொடர்ந்தும் பிரச்சனைகளுடன் வாழ வைக்க முடியாது – சந்திரகுமார்!

ஒரு இனம் தனது பொருளாதார கட்டமைப்புகளில் பலமாக இருக்கின்ற போதே அந்த இனத்தின் இருப்பும் பாதுகாக்கப்படும்.

அதாவது ஒரு தேசிய இனத்தின் தேசியம் பாதுகாக்கப்பட வேண்டுமெனில் அந்த இனம் தனது பொருளாதாரத்தில் மிகவும் பலமாக இருக்க வேண்டும். இனத்தின் பொருளாதாரம் சிதைக்கப்படும் போது இருப்பும் சிதைக்கப்பட்டு விடும் என கேடயச் சின்னத்தில் சுயேட்சைக் குழு 5 இல் போட்டியிடுகின்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம்(27.07.2020) கிளிநொச்சி உதயநகர் கிராமத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் .

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்…

அரசியல் பிரச்சனை தொடக்கம் வாழ்க்கை பிரச்சனை வரையில் ஏராளம் பிரச்சனைகளுக்கு மக்கள் முகம் கொடுக்கின்றனர் .எல்லாமே முக்கியமானவை அரசியல் தீர்வு கிட்டும் வரையில் கல்வியில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, வேலைவாய்ப்பின்மை, பொருளாதார பின்னடைவு, வளப்பகிர்வில் உள்ள பாரபட்சங்கள், குறைபாடுகள், சூழல் பாதுகாப்பு, எதிர்நோக்கும் சவால்கள் போன்றவற்றிற்கு தீர்வு காணாமல் இருக்க முடியாது.
முதலில் நாம் நமது மக்கள் எதிர்கொள்கின்ற இவ்வாறான அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண வேண்டும். இதுவே இனத்தின் இருப்பை தக்கவைக்கும்.

இவையெல்லாவற்றிற்கும் மிக விரைவான முறையில் தீர்வைக் காண வேண்டும். தமிழ் சமூகம் தொடர்ந்தும் பிரச்சனைகளுடன் வாழ வைக்க முடியாது. பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதன் மூலமே எமது மக்களை வளர்ச்சியை நோக்கி முன்னோக்கி நகர்த்த முடியும். எமது மக்களின் வளர்ச்சியே எமது இனத்தை பாதுகாப்பதற்கு வலுவைக் கொடுக்கும். எமது தேசிய அடையாளத்தை பாதுகாக்கும் என தெரிவித்தார்.