எங்களுடைய மக்களின் உரிமைகளை வென்றெடுக்கவே நாம் அரசியல் களத்தில் புகுந்தோம் – மணிவண்ணன்!

எங்கள் இனத்திற்கு எதிரான குற்றங்களைப் புரிந்த குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என போராடி வருகின்றோம். குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டாலே எதிர்காலத்தில் எம் இனத்தின் மீது புரியப்படும் குற்றங்களை தடுக்க முடியும், என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ் மாவட்ட வேட்பாளரும் சட்டத்தரணியுமான விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

தீவகம் புளியங்கூடல் பகுதியில் நேற்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்..

எங்களுடைய மக்களின் உரிமைகளை வென்றெடுக்கவே நாம அரசியல் களத்தில் புகுந்தோம். எங்களுடைய மண் பறிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று கல்வியும் பறிக்கப்பட்டு வருகின்றது. நான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறும்போது நூறு வீதம் தமிழ் மாணவர்களே கல்வி கற்றனர். ஆனால் இன்று எத்தனை சிங்கள மாணவர்கள் கல்வி கற்கின்றார்கள் ? கடல்வளத்தை யார் சூறையாடுகின்றார்கள்? இவ்வாறாக எல்லாமே பறிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையிலேயே நம் இனத்தின் மீதான அடக்குமுறைகளை, ஒடுக்குமுறைகளை இல்லாதொழிக்கவே எமக்கு அங்கீகாரம் தாருங்கள் என கேட்கின்றோம் எங்கள் இனத்திற்கு எதிரான குற்றங்களை புரிந்த குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என போராடி வருகின்றோம். குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டாலே எதிர்காலத்தில் எம் இனத்தின் மீது புரியப்படும் குற்றங்களை தடுக்க முடியும்.

அதுமட்டுமின்றி நமது வளங்களை சூறையாடும் அவர்களே எம் மண்ணை விட்டு அகற்ற வேண்டும். வடமராட்சி தொடக்கம் மண்கும்பான் வரையில் மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்களை மண்ணிலிருந்து அகற்ற வேண்டும்.

எனவேதான் கேட்கிறோம் எம் இனத்தின் மீது குற்றங்களை புரிந்தவர்களையும் வளங்களை சூறையாடுபவர்களையும் தண்டிக்க வேண்டும் என போராடும் எங்களுடன் நீங்களும் அணிதிரள வேண்டும் என கேட்கின்றோம். குற்றவாளிகளை தண்டிக்க எங்களுக்கு அங்கீகாரத்தை தந்து எம்முடன் அணிதிரண்டு வாருங்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளரான வி. மணிவண்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.