தமிழினம் இம்முறை பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலமே தமிழினத்தின் இருப்பையும் அடையாளத்தையும் தக்க வைத்துக் கொண்டு பொருளாதார ரீதியாக மேம்பட முடியும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும், யாழ். தேர்தல் மாவட்ட வேட்பாளருமான சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்தார்.
வட்டுக்கோட்டை பகுதியில் நேற்று புதன்கிழமை (29) இடம்பெற்ற பிரசார கூட்டத்திலையே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் ..
கிராமங்களின் முன்னேற்றங்களை இலக்காகக் கொண்டு செயற்படுவோம். கிராமங்களுக்கு நேரில் சென்று பாத்திருக்கிறோம். அவர்களின் துன்பங்களை நான் நன்கறிவேன்.

நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டாலும் , கிராம மக்களைச் சந்திப்பேன். போலி வார்த்தைகளைக் கூறி வாக்குகளை பெற்று பின்னர் மக்களை ஏமாற்றுபவர் அல்லர் நான்கள் .
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து கொள்கை ரீதியான முரண்பாடுகள் காரணமாகவே வெளியேறியவர்கள் நாங்கள்.
நாம் 2010ஆம் ஆண்டு முதல் தமிழ் தேசிய மக்கள் முன்னணியில் இயங்கி வருகின்றோம்.
எமது பிரச்சினைகள் கடந்த 70 ஆண்டுகளாக தொடர்கின்றது. தந்தை செல்வநாயகம் அரசியல் ரீதியாக எம் மக்களுக்காக போராடினார். அவரின் போராட்டம் வெற்றி பெறவில்லை என்பதனால் , 76ஆம் ஆண்டு சுதந்திர தமிழீழம் மலர வேண்டும் என பகிரங்க கோரிக்கை விடுத்தார். அதனால் இளைஞர்கள் உரிமைக்காக ஆயுதம் ஏந்திப் போராடத் தொடங்கினார்கள். எமது ஆயுத போராட்டம் 2009ஆம் ஆண்டு மௌனிக்கப்பட்டது.
என்ன நோக்கத்துக்காக 70ஆம் ஆண்டு போராடத் தொடங்கினாரோ அது இன்றுவரை நீங்க வில்லை. ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் நாம் காந்தீய வழியில் சாத்வீக போராட்டங்களை முன்னெடுத்து வருகிறோம்.
இன்று எமது நிலங்கள் பறிக்கப்படுகின்றன , கடல் வளங்கள் சூறையாடப்படுகின்றன , கல்வி வீழ்ச்சியடைந்து செல்கின்றது , வேலை வாய்ப்புக்கள் இன்றி இளையோர் சவால்களை எதிர்நோக்கி உள்ளனர், பொருளாதார ரீதியாக நசுக்கப்பட்டு வருகின்றோம் .
இவ்வாறாக எமது இனம் ஒடுக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்ற போது எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மௌனிகளாக இருக்கின்றனர். தமிழ் மக்களின். அரசியல் தீர்வைப் பெற்று தரவும் இல்லை. எமது இனத்தை பொருளாதார ரீதியிலும் முன்னேற்ற நடவடிக்கைகள் எடுக்கவுமில்லை.
நான் நாடாளுமன்றம் சென்றால் எமது அரசியல் பிரச்சினைகளை தீர்க்க போராடுவது மட்டுமின்றி , எம் இனத்தை பொருளாதார ரீதியாக முன்னேற்றவும் முயற்சிகளை முன்னெடுப்பேன்.
வெளிநாட்டு உறவுகளுடன் கை கோர்த்து வெளிநாட்டு முதலீட்டாளர்களை அழைத்து வந்து எமது மண்ணிலே முதலீடுகளை ஊக்குவிப்பதன் ஊடாக எமது மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும்.
எமக்கான மாற்றம் ஏற்படாதுவிடின் எமது மண் பறிபோவது மாத்திரமின்றி பொருளாதார ரீதியாகவும் மிகவும் பின்தங்கி எமது இருப்பை இல்லாது ஆக்கிவிடுவார்கள்.
எனவே, இம்முறை மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலமே எமது இருப்பைத் தக்க வைத்துக்கொண்டு நாம் பொருளாதார ரீதியாக முன்னேற முடியும்.
எமது இனத்துக்காக வீதிகளில் இறங்கிப் போராடி வருகின்றோம். தமிழ் இனம் அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட போது நாமே போராடினோம். எமக்கான அங்கீகாரம் இல்லாமலே நாம் போராடினோம்.
இம்முறை நாடாளுமன்றத்துக்கு எம்மை அனுப்புவதன் மூலம் தமிழினத்தின் இருப்பை உறுதி செய்து கொள்வோம்” என்று தனது உரையில் குறிப்பிட்டிருந்தார்.