முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், முன்னாள் போராளிகள் என்ற சொல்லைக் கூட உச்சரிக்க அருகதையற்றவர். என முன்னாள் தமிழீழ அரசியல்துறையின் நடுவகப்பணியக நிர்வாகப் பொறுப்பாளராக இருந்தவரும் கேடயச் சின்னத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளருமான மணியண்ணன் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

உதயநகர் கிராமத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்..
போராட்டத்தில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டதுக்கு உரிய மதிப்பும் மரியாதையும் மிக்க வாழ்வை நாம் பெற வேண்டும். கிளிநொச்சி மாவட்டத்தில் அதற்கான அடித்தளத்தை இட்டு மாற்றத்தை ஏற்படுத்துவோம்.
அதற்காக பல நூற்றுக்கணக்கான முன்னாள் போராளிகள் திடசங்கற்பம் பூண்டுள்ளார்கள். .
எங்களது தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் வைத்து அரசியல் செய்யும் இவர்கள். முன்னாள் போராளிகளின் நலன்களில், அவர்களின் முன்னேற்றத்தில் எப்பொழுதும் அக்கறை கொண்டது கிடையாது.
வார்த்தைக்கு வார்த்தை மாவீரர்களின் தியாகங்களையும் விடுதலைப்புலிகளின் போராட்டத்தையும் வைத்து அரசியல் செய்யதவர்கள் இவர்கள்.
ஒரு காலத்திலும் எங்களை மதித்தது கிடையாது. எங்கள் உணர்வுகளை புரிந்துகொண்டதும் கிடையாது. இதனால்தான் கிளிநொச்சியில் பலநூறு முன்னாள் போராளிகள், பொறுப்பாளர் கள் என எல்லோரும் இணைந்து சமத்துவக் கட்சியோடு அணி சேர்ந்துள்ளோம்.
சொற்களால் விபரிக்கமுடியாத தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் செய்த போராளிகளையும் மக்களையும் வியாபாரப் பொருளாக்கி, போலித்தேசியம் பேசும் அரசியல்வாதிகள் கடந்த பத்தாண்டுகளாக தம்மையும் சுற்றத்தையும் வளப்படுத்திக் கொண்டுள்ளனர். இழப்புக்களைச் சந்தித்த சமூகம் முடிவுறாத அவலத்துக்குள்ளும் துன்பத்துக்குள்ளும் தவிக்கின்றது.
இந்த படுபாதக நிலையை மாற்றியமைக்க வேண்டும். இதற்காகக் களத்தில் நின்று செயற்பட்ட பல நூறு முன்னாள் போராளிகளும்,மருத்துவர்களும் ஒன்று சேர்ந்துள்ளோம்.
இதுவரை காலமும் எம்மை தமக்குத் தேவையான கட்சி பொருளாகப் பாவித்த அரசியல்வாதிகளை நிராகரித்து புதிய தலைமைத்துவத்தை உருவாக்குவோம்.
சுயேட்சைக் குழு -5இல் கேடயம் சின்னத்தில் போட்டியிடும் முருகேசு சந்திரகுமார் தலைமையிலான சமத்துவக்கட்சியை வெற்றி பெறச் செய்வதன் மூலமாகவே எமது இலக்கை அடைய முடியும்” என அவர் தெரிவித்துள்ளார்.