மரியானா அகழி (Mariana Trench)

165

உலகத்தின் ஆழ்கடல்களின் பாதாளம் என அறியப்படும் இது. பசுபிக் சமுத்திரத்தில் மரியானா தீவுகளுக்கு அன்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புவி மேலோட்டின் மிக தாழ்வான பகுதியாக அறியப்படும் இதன் ஆழம் சுமார் 35,840 அடிகளாகும். அதாவது 6.78 மைல்கள். உலகின் மிக உயரமான இமைய மலையை அப்படியே கவிழ்த்து இதனுள் வைத்தால் அது முழுதாக மூழ்கிவிடுமாம்.

1960 ம் ஆண்டளவில் இந்த ஆழத்தை அமெரிக்கா கண்டறிந்த போதும் மனிதர்களை அங்கு அனுப்புவதென்பது சாத்தியமற்றதாகவே இருந்தது. காரணம் வளிமண்டல அழுத்தத்தை(Pressure) விட இங்கு 1100 மடங்கு அதிக அழுத்தம் காணப்படுகிறதாம். சொல்லப்போனால் நம் தலைக்குமேல் 15 யானைகளை வைத்தால் எப்படி இருக்குமோ அப்படி.

இங்கு உயிர்கள் வாழ சாத்தியமே இல்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்தபோதும் 1995 ஜப்பானின் ஆளில்லா கலம் அங்கு சென்று வியக்கத்தக்க தகவல்களை சேகரித்து வந்தது. ஆம் அங்கு சாதாரண கடல்களில் தென்படாத விசித்திரமான உயிரினங்கள் இருப்பதை உறுதி செய்தது.

பின் 2012 ம் ஆண்டில் பிரபல ஆங்கில திரைப்பட இயக்குனர் ஜேம்ஸ் கேமரான் பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்ட கலம் மூலம் அங்கு சென்று பல அறிவியல் தகவல்களை சேகரித்து வந்தமை குறிப்பிடதக்கது.