எனக்காக பிறப்பெடுத்த புல்லாங்குழலே
என் நேசக்கரத்தால் உனை மீட்டி
காற்றலையோடு இராகம் பாடி
சிங்கார கீதத்தை இசைக்கப் போகிறேன்
வனவாசம் களைந்து
புது நதியில் நீராடி
காருண்யமாய் காவியமெழுதி
அதை காணிக்கை செலுத்தப்போகிறேன்
சலனங்கள் ஏதுமின்றி
உள்ளத்துச் சிறையுடைத்து
கருவறை தாண்டி
இரகசியமாய் உள் நுழைந்து
இசையால் புதுப் புரட்சி செய்வேன்
ஆதி அந்தக் கனவோடு
புழுதி மண்ணில் நின்றுகொண்டு
விழி நீரால் அர்ச்சனை செய்து
நம்தேச கீதத்துக்கு உனை மீட்டியே
பாமாலை சூட வேண்டும்
மக்கிப் போனாலும் கர்ச்சித்து
உயிர்ப்பாக வடித்தெடுத்த சிலைபோல்
என் பூர்வீக மண்ணில்
நின்று கொண்டொரு
ராகமிசைக்கப் போகிறேன்
மேனி சிலிர்க்க பரவசத்தோடு இசைவடிப்பேன்
மனதை ஊடுருவித் துடிக்கும் நினைவுகள்
பெருகிடும் காதலோடு
போதையாய் பேதையின் ஆசைகள்
துளிர்த்து நிற்கும் ஞாபக வேர்களே
இசையில் அரங்கேற்றம் காண்பதற்கு
தெம்மாங்காக வந்துவிடுங்கள்
நீர்ப்பறவையாய் தாகத்தோடு காத்திருக்கிறேன்…
புலரும் பொழுதில்
சூரியனைத் தேடும் தாமரையாய்
துன்பக்கோடுகளை பெருந்தீயில் அழித்து
என் மூச்சுக் காற்றை இசையோடு தூதுவிடுகிறேன்
-பிரபாஅன்பு-