தமிழ் தேசிய கூட்டமைப்பினை உருவாக்கியவர்களில் கருணா அம்மானுக்கும் பங்குள்ளதாக ஜனநாயக போராளிகள் கட்சியின் கொள்கைபரப்பு செயலாளர் ப.கோணேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்டத்தில் எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் மக்கள் எவ்வாறு வாக்களிப்பது தொடர்பாக விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை இடம்பெற்ற போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்..
கருணா அம்மான் விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த போது தான் தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.அவர் இருக்கும் போது கூட்டமைப்பு உருவாக்கத்தில் அவருக்கு பங்கு உள்ளது.ஆனால் இவ்வாறு கூட்டமைப்பினை உருவாக்கி விட்டு அவர் தலைவரின் (வேலுப்பிள்ளை பிரபாகரன்) பாதையில் பயணிக்கவில்லை.வேறு நிகழ்ச்சி நிரலில் பயணிக்கின்றார்.எனவே இதில் அவரை சம்பந்தப்படுத்த தேவையில்லை.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர் அல்ல.அமைப்பில் இணைந்து சயினைட் குப்பி அணிந்து போராடியவர் இல்லை.கூட்டமைப்பின் தலைவராகவே நியமிக்கப்பட்டிருந்தார்.அவர் பல நாடுகளிற்கு சென்று இராஜதந்திர நடவடிக்கைக்காக சென்று பலவாறு பேசி வருபவர்.இதனால் பல வடிவங்களில் தனது கருத்தை முன்வைத்து வருகின்றார்.அதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பினை பிரபாகரன் உருவாக்க வில்லை என கூற முடியாது.எனவே தான் சம்பந்தன் ஐயாவிற்கு இவ்வாறு கதைக்க வேண்டிய தேவை உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.