தேர்தலின் பின் சுமந்திரன், சிறீதரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை – மாவையின் மாஸ்டர் ப்ளான்!

தமிழ் அரசுக் கட்சிக்குள் இருந்து கொண்டு சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தற்போதைய வேட்பாளர்களுமாகியஎம்.ஏ. சுமந்திரன், சி.சிறிதரன் ஆகியோர் தொடர்பில் எதிர்வரும் தேர்தலுக்குப் பின்னர் தமிழ் அரசுக் கட்சியினால் இவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் .
தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது தேர்தல் நேரத்தில் பல பாதிப்புக்களை ஏற்படுத்திவிடும்.

அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கட்சிக்குள் இருந்து முறைப்பாடுகள் கிடைத்தால் தேர்தலுக்குப் பின்னர் கட்சி அது பற்றி ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும்” என்று தெரிவித்துள்ளார் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் யாழ். மாவட்ட முதன்மை வேட்பாளருமான மாவை சேனாதிராசா.

நேற்றிரவு (26) ஊடகம் ஒன்றில் நேரடி ஒளிபரப்பு நிகழ்வில் பங்கேற்று கருத்து வெளியிடும்போதே அவர் இதனைக் கூறினார்.

தமிழ் அரசுக் கட்சியின் வேட்பாளர்களான சுமந்திரன், சிறிதரன் ஆகியோர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துகள் தொடர்பில் அதன் கட்சியின் தலைமை இதுவரை அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதமை ஏன் என அவரிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறியிருந்தார் .

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

“கட்சிக்குள் இருந்து கொண்டு சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்துள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சிறிதரன் தொடர்பில் எதிர்வரும் தேர்தலுக்குப் பின்னர் கட்சி நடவடிக்கை எடுக்கும். இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அது தேர்தல் நேரம் பல பாதிப்புக்களைக் ஏற்படுத்தி விடும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.