இலங்கைத் தமிழர் விவகாரத்தை இந்திய மத்திய அரசு கையில் எடுத்துள்ளது . தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இந்திய அரசின் உயர்மட்டத்தினர் – டில்லி வட்டாரங்கள் விரைவில் பேச்சு நடத்தவுள்ளனர் . “இந்தியாவையும் அமெரிக்காவையும் சீண்டும் விதத்தில் சீன அரசு , இலங்கையில் ராஜபக்ஷ அரசுடன் நெருக்கத்தைப் பகிரங்கப்படுத்தி நிற்கின்றது . அதற்குப் பதிலடியாகவே தமிழர் விவகாரத்தை இந்தியாகையில் எடுத்திருப்பதாகத் தெரிகின்றது .
” – இப்படி செய்திகள் வெளியாகியிருக்கின்றன . புதுடில்லிக்கும் தமிழர் தரப்புகளுக்கும் இடையில் ஊடாட்டம் இருப்பதற்கானவாய்ப்புகளை நிராகரிக்காத இந்திய இராஜதந்திர வட்டாரங்கள் , மற்றைய விவரங்களை உறுதிப்படுத்த மறுத்துவிட்டன . ” நீண்ட நாள்களாக தொடர்பாடலுக்கான ஏற்பாட்டைச் செய்யுமாறு தமிழர் தரப்பிலிருந்து வற்புறுத்தல் வந்து கொண்டே இருக்கின்றது . இப்போதைய கொரோனா தொற்றுப்பரவல் நெருக்கடிக்கு இடையில் நேரடியான சந்திப்புகள் , கூட்டங்களுக்கு வாய்ப்புகள் இல்லை . அதனால் குறைந்தபட்சம் காணொலி மூலம் ஊடாட்டம் செய்யலாம் என்பதற்குக் கொள்கை அளவில் இணக்கத்தைத் தமிழர் தரப்புக்குத் தெரிவித்துள்ளோம் . ஆனால் அதற்கான திகதி ஏதும் தீர்மானிக்கப்படவில்லை . ”
– என்று இந்திய வட் டாரங்கள் தெரிவித்தன . அத்தரப்பில் இருந்து சுட்டிக்காட்டப்பட்ட பிற முக்கிய விடயங்களையும் கவனத்தில் நாம் கொள்ள வேண்டும் .
* முதலில் காணொலி மூலம் – இணையத் தொடர்பாடலில் – ஊடாடுவது நம்பிக்கையான முறைமையல்ல . மூடிய அறைக்குள் – பிறருக்கும் பகிராமல் உயர்மட்டத்தில் – பேசப்பட வேண்டிய நம்பகமான விடயங்களை காணொலித்திரைமூலம் மேற்கொள்ளவே முடியாது . பதிவு செய்யப்படக்கூடிய காணொலி உரையாடல்களில் முழு அளவிலான இராஜதந்திரவிடயங்களைப் பரிமாறுவது என்பது சாத்தியமானதேயல்ல . அதுவும் தமிழர் தரப்பில் இரா . சம்பந்தன் போன்றோர் தளர்ச்சியுற்ற நிலையில் இருக்கையில் காணொலித்திரை மூலம் பரஸ்பரம் நம்பிக்கையைக் கட்டி எழுப்பும் நுணுக்கமான விடயங்களை உரையாடவே முடியாது .
* ஆகவே , வெளித்தரப்புகளுக்கு இராஜதந்திர ரீதியிலான சமிக்ஞைகள் , செய்திகளை வெளிகாட்டுவதற்கும் , பரஸ்பர நம்பிக்கையை உறுதிப்படுத்தும் ஒருசெயற்பாடாகவும் இத்தகைய காணொலி மூலமான உரையாடல்கள் அமைய முடியும் . அதற்கு அப்பால் இதில் பிரயோசனம் ஏதும் இருப்பதாகப் புதுடில்லி கருதவில்லை .
* இன்றைய அரசியல் சூழலில் கொழும்புக்கு புதிய அழுத்தத்தைக் கொடுக்கக்கூடியதான புதிய நடவடிக்கைகள் ஏதும் கட்டவிழவில்லை . தமிழர் தரப்பிலிருந்து புதிய செய்திகள் , தகவல்கள் , நிலைப்பாடுகள் பிரதிபலிக்கப்படவில்லை . அத்துடன் தமிழர் தரப்பு ஒன்றுபட்டு புதுடில்லியை அணுகும் சூழ்நிலையோ , ஒன்றுபட்டு ஒரேகருத்தாக- சாத்தியமான அணுகுமுறையோமுன்வைக்கப் படவில்லை . இந்தப் பின்புலத்தில் கொழும்பை வற்புறுத்துவதற்கான எந்தத் துரும்பும் புதுடில்லியிடம் இல்லை . – இவ்வாறு இந்திய வட்டாரங்கள் சுட்டிக் காட்டுகின்றன . புதுடில்லி இப்போது தமிழர்தரப்பை நேரடிப் பேச்சுக்கு அழைத் தாலும் , ‘ பழைய குருடி கதவைத் திறடி ‘ என்ற பாணியில்தான் அதனை அணுக வேண்டியிருக்கும் . புதுடில்லியை அணுகுவதற்கான மாற்றுக் கொள்கைத் திட்டம் ஒன்று – கொள்கை வழிகாட்டல் பாதை அல்லது குறிப்பு ஒன்று – நம்மிடம் இருக்கின்றதா ?
குறைந்தபட்சம் தமிழ்த்தேசியத்தைப் பிரதிபலிக்கும் சக்திகளிடையே புதுடில்லியும் சர்வதேசத் தரப்புகளும் சாத்தியமான – நியாயமான – திட்டம் என்று கருத்தில் எடுக்கக் கூடிய கோரிக்கை வடிவம் ஒன்று இருக்கின்றதா ? அதை விட்டாலும் கூட , ஆகக் குறைந்த பட்சம் இந்தியாவை மட்டுமல்ல , சர்வதேசத் தரப்புகள் அனைத்தையும் அணுகுவதற்கான ஒன்றுபட்ட தலைமைத்தளம் இருக்கின்றதா ?
திம்புவில் தொடங்கி , பெங்களூர் , டில்லி , கொழும்பு என்று பல இடங்களில் நடந்த பேச்சுக்களில் எல்லாம் ஒரு பக்கத்தில் ஒரே தரப்பாக இலங்கை . மறுபக்கத்தில் தமிழர் தரப்பின் பிரதி நிதிகள் என்று பல்வேறு குழுக்கள் . இலங்கை அரசு கூட , தனித்து தமிழரின் ஏக பிரதிநிதிகளாகப் புலிகளுடன் பேசிய போதுதான் ஒஸ்லோ அறிக்கை வரை பேச்சுகள் முன்னேற முடிந்தது என்பதை நாம் மறந்து விடக்கூடாது . நாம் , இந்தப்பத்தியில் ஏற்கனவேசுட்டிக்காட்டியபடி , சர்வதேச தரப்புகள் தமது தேசிய நலன்களை அடிப்படையாக வைத்து நிகழ்த்தும் சதுரங்க ஆட்டத்தின் எங்கோ ஒருமுனையில் – காய் நகர்த்தலின் இடையே – நமது நலன்களையும் பாதுகாக் கும் அருமையான வாய்ப்புக் கிட்டும் . அந்த வாய்ப்பை – சந்தர்ப்பத்தை – குழப்பாமல் பக்குவமாகப் பயன்படுத்துவதற்கு முயல வேண்டும் . அத்தகைய வாய்ப்பு இப்போது வந்திருக்கலாம் . ஆனால் அதைக்கையாள்வதற்காக ஐக்கியமான – ஒன்றுபட்ட – நிலையில் சாத்தியமான திட்ட வரைபடத்துடன் தமிழர் தரப்பு தயாராக இருக்கின்றதா ?
இல்லை என்பதுதான் வேதனையான யதார்த்த நிலைமை யாகும்.
- பிரித்தானியாவில் நடைபெற்ற கறுப்பு யூலை நினைவு நாள்
- மே18 முள்ளிவாய்கால் தமிழினப்படுகொலை நினைவு நாள் பிரித்தானியா
- மே18 முள்ளிவாய்கால் தமிழினப்படுகொலை நிகழ்வுகள் பிரித்தானியா
- அன்றே கூறினாா் எம் ஈழத்தின் கவிஞா்
- லன்டனில் நடைபெற்ற தியாக தீபம் திலீபனின் 34ம் ஆண்டு நினைவு நிகழ்வு