பிரான்சில் தமிழ் குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் வன்முறைக்கு பலி, மேலும் ஐவரின் நிலை கவலைக்கிடம்..
Noisy-le-Sec நகரில் (03/10/2020) சனிக்கிழமை காலை இடம்பெற்ற குடும்ப வன்முறை காரணமாக ஐவர் பலியாகியுள்ளனர்.
Noisy-le-Sec, (Seine-Saint-Denis) நகரின் rue Emmanuel Arago வீதியில் உள்ள குடும்பத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த வீதியில் உள்ள மதுச்சாலை ஒன்றுக்கு படுகாயமடைந்த நிலையில் வந்த இளைஞன் ஒருவர் உதவிக்குழுவை அழைக்கும் படி கோரியுள்ளார்.
“எனது மாமா என் குடும்பத்தில் உள்ள அனைவரையும் கொலை செய்துவிட்டார்” என குறித்த இளைஞன் மதுச்சாலையின் நிர்வாகியிடம் தெரிவித்துள்ளார்.
சம்பவ இடத்துக்கு சில நிமிட இடைவெளியில் வந்து சேர்ந்த காவல்துறையினர், சம்பவ இடத்தை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வீடு முழுவதும் இரத்தம் தெறித்து இருக்க ஐந்து பேரின் சடலங்களை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். மேலும் ஐவர் படுகாயமடைந்த நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்துள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
வன்முறைக்கு பலியானவர்களில் சிறுவர்களும் மற்றும் ஒரு பெண்ணும் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
சம்பவ இடம் மிகவும் பயங்கரமாக இருந்தது. எங்களில் பலர் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர். கத்தி ஒன்றும் பெரிய சுத்தியல் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது, என காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தாக்குதல் நடத்திய நபர் சம்பவ இடத்தில் ‘கோமா’ நிலையில் இருந்ததாகவும், இவர்கள் அனைவரும் இலங்கையர்கள் எனவும் பிரான்ஸ் காவல்துறையினர் தெரிவித்தனர்.