மே 6 – உளவியலாளர் சிக்மண்ட் பிராய்ட் (Sigmund பிராய்ட்) பிறந்த நாள்

468

ஆஸ்திரிய உளநோய் மருத்துவரான சிகிமண்ட் ஸ்லோமோ பிராய்ட் (Sigismund Shlomo Freud) என்னும் இயற்பெயர் கொண்ட இவர் உளவியலின் உளப்பகுப்பாய்வுச் சிந்தனை முறையை நிறுவியவர்.

உள்மனம் (unconscious mind) பற்றிய இவரது கோட்பாடுகள், அடக்குதலுக்கு எதிரான பாதுகாப்புப் பொறிமுறை, உளப்பிணிகளை, பிணியாளருடன், உளப்பகுப்பாய்வாளர் பேசிக் குணப்படுத்துவதற்காக உளப்பகுப்பாய்வுச் சிகிச்சைச் செயல்முறைகளை உருவாக்கியமை என்பவற்றின் மூலம் பிராய்ட் பெரும் பெயர் பெற்றார். பாலுணர்வு விருப்பு என்பதை மனித வாழ்வின் முதன்மையான உந்து சக்தி என வரையறுத்தமை, இவரது சிகிச்சை நுட்பங்கள், உணர்வு மாற்றீட்டுக் கோட்பாடு (theory of transference), உள்மன ஆசைகளின் வெளிப்பாடாகக் கனவுகளை விளக்குதல் போன்றவை தொடர்பிலும் பிராய்ட் பெரிதும் அறியப்பட்டவர்.

சிக்மண்ட் பிராய்ட், 1856 ஆம் ஆண்டில், தற்போது செக் குடியரசில் உள்ளதும், முன்னர் ஆஸ்திரியப் பேரரசில் அடங்கியிருந்ததுமான, மொரேவியாவில் இருந்த பிரிபார் என்னும் இடத்தில் பிறந்தார்.

இவரது பெற்றோர் கலீசிய யூத இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர் பிறக்கும்போது இவரது தந்தையாருக்கு 41 வயது. அவரது முதல் மனைவி மூலம் ஏற்கனவே இரண்டு பிள்ளைகள் இருந்தனர். இரண்டாம் மனைவிக்குப் பிறந்த 8 பிள்ளைகளுள் இவரே மூத்தவர். இவரது சுட்டித்தனமான அறிவினால் இவரது பெற்றோரிடம் ஏனைய பிள்ளைகளிலும் பார்க்க இவர்க்குக் கூடிய சலுகைகள் இருந்தன.

குடும்பம் வறுமையில் இருந்தபோதும், சிக்மண்ட் பிராய்டின் கல்விக்காக அனைத்தும் செய்தனர்.

1857 ஆம் ஆண்டின் பொருளாதார நெருக்கடியின் போது, பிராய்டின் தந்தையாரின் வணிகத்தில் இழப்பு ஏற்பட்டது. இதனால், அவர் குடும்பத்துடன் லீப்சிக்குக்குச் சென்று பின்னர் அங்கிருந்து வியன்னாவுக்குச் சென்று குடியேறினார்.

சிக்மண்ட் பிராய்ட் அங்கிருந்த முன்னணிப் பள்ளியொன்றில் சேர்ந்து கல்வி கற்றார். ஒரு சிறந்த மாணவனாக விளங்கிய அவர் 1873 ஆம் ஆண்டில் சிறப்புத் தகைமைகளுடன் இரண்டாம் நிலைக் கல்வியில் சித்தியடைந்து வெளியேறினார்.

சட்டத்துறையில் உயர்கல்வியைத் தொடர முதலில் விரும்பினாலும், பின்னர் வியன்னாப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிப்பதற்காகச் சேர்ந்தார்.

இவர் டார்வினியப் பேராசிரியராகிய கார்ல் கிளாஸ் (Karl Claus) என்பவரின் கீழ் மருத்துவத்தைக் கற்றார்.

1874 ஆம் ஆண்டில் உள இயக்கவியல் என்னும் கருத்துருவை, ஜெர்மானிய உள கூற்றியலாளரான ஏர்ண்ஸ்ட் வில்ஹெல்ம் வொன் புரூக் (Ernst Wilhelm von Brücke) என்பவர் தனது உடற்கூற்றியல் விரிவுரைகள் என்னும் வெளியீட்டில் அறிமுகப்படுத்தினார்.

இவர் வெப்ப இயக்கவியலின் முதலாவது விதியை உருவாக்கியவர்களுள் ஒருவரான ஹேர்மன் வொன் ஹெல்ம்ஹோல்ட்ஸ் என்பவருடன் இணைந்து எல்லா உயிரினங்களுமே ஆற்றல் முறைமைகளே என்றும் அவையும் அதே விதிக்கு உட்பட்டவையே என்றும் கருத்து வெளியிட்டனர்.

பிரெஞ்சு தத்துவம் மற்றும் உளப்பகுப்பாய்வு துறையில் முக்கிய பங்காற்றிய யூங் மற்றும் லக்கான் ஆகிய இருவரும் தமக்கான அணுகுமுறைகளை சிக்மண்ட் பிராய்ட் இடமிருந்தே பெற்றுக் கொண்டார்கள். உளவியலில் பிராய்ட் இன் பாலியல் மட்டுமேயான மைய அணுகுமுறையை இருவருமே மறுத்தாலும் அவர்களது ஆய்வுச்செயற்பாடுகளுக்கு பிராய்டின் பிரதிகளே அடிப்படையாகும்.

ஜேர்மனியை மையமாகக் கொண்டியங்கும் மார்க்சியப்பள்ளியான ப்ராங்பேர்ட் பள்ளியின் தத்துவப்போக்கில் பிராய்டின் எழுத்துக்கள் பெரும்பங்கு வகித்திருக்கின்றன.

பிராங்பேர்ட் பள்ளியின் முக்கியகர்த்தாக்களான எரிக் பிராம் போன்றவர்கள் பிராய்டின் உளவியல் பகுப்பாய்வு முறையால் பெரிதும் தூண்டப்பட்டிருந்தனர்.

சிக்மன்ட் பிராய்டின் முக்கிய கண்டுபிடிப்பு ‘இயக்கவியல் மனோவியல்’ அல்லது ‘இயக்க உளவியல்’ ( Dynamic Psychology) ஆகும்.

இயக்கவியல் விதிகளை மனிதரின் ஆளுமைக்கும் அவரது உடலிற்கும் பாவிக்க முடியுமென்பதைக் கண்டுபிடித்ததே இவரது மிகப் பெரிய சாதனையாகும்.

நவீன விஞ்ஞான வளர்ச்சியிலும் இது ஒரு மைல் கல் ஆகும். இது இயக்கவியல் உளவியல் மனிதரில் குணவியல்புகளில் ஏற்படும் மாற்றங்களை விளக்குவதாகும்.

பாலுணர்வு விருப்பு என்பதை மனித வாழ்வின் முதன்மையான உந்து சக்தி என வரையறுத்தமை, இவரது சிகிச்சை நுட்பங்கள், உணர்வு மாற்றீட்டுக் கோட்பாடு (theory of transference), உள்மன ஆசைகளின் வெளிப்பாடாகக் கனவுகளை விளக்குதல் போன்றவை தொடர்பிலும் சிக்மன்ட் பிராய்ட் பெரிதும் அறியப்பட்டவர் ஆவார்.

சிக்மண்டு பிராய்டு மானிடரின் மனத்தை மூன்று பகுதிகளாகப் பிரித்தார். அவை,

  1. உணர்வு மனம் (Conscious Mind)
  2. உணர்விற்கு அப்பாற்பட்ட மனம் (Sub-Conscious Mind)
  3. தொலை நோக்கு மனம்

கவிஞர்களும் சிந்தனையாளர்களும் உணர்விற்கு அப்பாற்பட்ட மனம் அதிகம் உண்டு என்று இவர் கண்டறிந்து கூறியதாலும் இவர் புகழ்பெற்றார். மேலும் மானிடரின் குண இயல்புகள் பின்வரும் மூன்று சூழ்நிலை உணர்வுகளாலேயே ஏற்படுகிறது என்றும் கூறினார். அவை,

  1. உணர்வால் உந்தப்படும் இயல்பு (Id)
  2. முனைப்பால் உந்தப்படும் இயல்பு (Ego)
  3. அகத்தால் உந்தப்படும் இயல்பு (Super Ego)
    இந்த மூன்று குணநலன்களுக்கு இடையில் நடக்கும் போராட்டமே மனித ஆளுமையை நிர்மானிக்கும் என்று கூறினார்.

சிக்மண்ட் பிராய்ட்,’மனிதன் பிறக்கும் போது, வெற்றுத்தாள் போல் தான் பிறக்கின்றான். இவ்வுலகில் அவன் கண்டு, கேட்டு உற்று அறியும் சம்பவங்கள் மூலம், மெல்ல மெல்ல அவன் நல்லது, கெட்டது பகுத்தறியும் திறன் பெறுகிறான்’ என்று கருதினார்.

பிராய்டு முனைப்பால் உந்தப்படும் இயல்புக்கும் உணர்வால் உந்தப்படும் இயல்புக்கும் உள்ள உறவு ஒரு தேரின் ஓட்டுநருக்கும் அதன் குதிரைக்கும் உள்ளான உறவைப் போன்றது என்று விளக்கினார்.