காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வவுனியா பழைய பஸ் நிலையத்துக்கு முன்பாக இன்று (30) காலை ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
தமது உறவுகளின் உண்மை நிலையை வெளிப்படுத்துவதற்கு சர்வதேசம் தலையிடவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்,

எமது உறவுகளின் நிலையை வெளிப்படுத்துமாறு கோரி ஒவ்வொரு மாதமும் 30ஆம் திகதி போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றோம். அரசியல்வாதிகள் எமது பிரச்சினைகளை தீர்த்துவைக்கத் தவறியுள்ளனர். அந்த வகையில் சர்வதேசநீதியை கோரி நாம் போராடிவருகின்றோம்.
இன்று தமிழர்களுக்கு எதிராகவும் தமிழ்த்தேசியத்துக்கெதிராகவும் பலர் பேசிக்கொண்டிருக்கின்றனர். தமிழ்த் தேசியத்துக்காகப் பாடுபடுகின்ற கட்சிகளில் ஒட்டுக்குழுக்களாக இருந்தவர்களும் பயணிக்கின்றனர். அவர்கள் ஒவ்வொருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் விமர்சித்துவருகின்றனர்.
தமிழ்மக்களின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பவர்களாக இருப்பவர்களையே நாடாளுமன்றத்துக்கு அனுப்புவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்
இன்று வீடுவீடாகச் சென்று மக்களிடம் வாக்குக் கேட்க்கின்றார்கள். தமது பணிகளை சரியாகச் செய்திருந்தால் வீடுவீடாகச் செல்லவேண்டிய தேவை இல்லை.
எனவே, யாரை நாடாளுமன்றம் அனுப்பவேண்டும் என்று மக்களுக்கு நன்கு தெரியும். எனவே எமக்கான நீதிக்கான வலுவினைச் சேர்க்கவேண்டும் என்று மக்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம். “என்றனர்.