விடுதலைப் புலிகளின் தடைநீக்கத்திற்கான விழிப்பூட்டல்

142

வேல்ஸ் நாடாளுமன்ற தொகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (23/04/2021) அன்று தொடங்கிய விடுதலைப்புலிகள் மீதான பிரித்தானியாவின் தடைக்கு எதிரான மக்கள் விழிப்பூட்டல் நடைப்பயணம் ” WALK FOR LIFT THE BAN”  புதன்கிழமை (28/04/2021) அன்று இறுதி நாள் பிரித்தானிய பிரதமர் அலுவலகத்தை சென்றடைந்தது இந்நடைப்பயணத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர்களும் மற்றும் பொதுமக்களும் ஈடுபட்டுள்ளனர்.

பிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடை என்பது நாடாளுமன்றத்தின் ஊடாகவே கொண்டு வரப்பட்டிருந்த நிலையில், அத்தடையினை நாடாளுமன்றத்தின் ஊடாக நீக்கக் கோரும் அழுத்தம் நாடாளுமன்ற உறுப்பினர்களை நோக்கி அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

தடையினை நீக்க கோரி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற சட்டப்போராட்டத்தின் வாதுரையில் நாடாளுமன்றத்தின் ஊடாகவே இத்தடை நீக்கப்பட வேண்டும் கோரப்படுகின்றது.

இந்நிலையில் பிரித்தானிய வாழ் தமிழர்கள் தாம் வசிக்கின்ற தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்தத்தினை www.lifttheban.uk இந்த இணையவழி மூலமாக முன்னெடுத்து வருகின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடை என்பது, பிரித்தானிய வாழ் தமிழர்களின் இயல்பு வாழ்க்கையினை பாதிப்பதோடு, தமது சுதந்திரமான அரசியல் செயற்பாடுகளுக்கும் தடையாக இருக்கின்ற நிலையில், இத்தடையினை நீக்கக் கோரும் தமது விருப்பினை பிரித்தானிய வாழ் தமிழ்உறவுகள் வெளிப்படுத்தும் வகையில் www.lifttheban.uk எனும் இணையத்தளம் செயற்படத் தொடங்கியுள்ளது.

நாடாளுமன்றத்தின் ஊடாகவே இத்தடை கொண்டுவரப்பட்டிருந்த நிலையில், நாடாளுமன்றத்தின் ஊடாகவே தடை நீக்கம் செய்யப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தி, தமது தொகுதி பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இவ்விடயத்தினை கவனத்தில் கொண்டு செல்லும் வகையில் இந்த இணையத்தளம் செயற்படுகின்றது.

இது தொடர்பில் பொதுமக்களுக்கு அரசியல் விழிப்பினை ஏற்படுத்தும் நோக்கிலேயே தொடங்கியுள்ள இந்த நடைப்பயணமானது பிரித்தானிய பிரதமர் அலுவலகத்தினை வந்தடைந்துள்ளது

தாம் முன்னெடுத்துள்ள இந்நடைப்பயணத்திற்கான ஆதரவினை தெரிவிக்க விரும்பும் ஒவ்வொருவரும் குறித்த இணையத்தளத்துக்கு சென்று தடைநீக்கத்திற்கான தமது விருப்பினை வெளிப்படுத்துவே தமது வேண்டுகோளாக இருக்கின்றது என இந்நடைப்பயணத்தில் ஈடுபட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

பயங்கரவாத தடைப்பட்டியலில் விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் வைத்திருக்கும் பிரித்தானிய உள்துறையமைச்சரின் செயல் சட்டமுறைமைக்கு முரணானது என ஆணையம் தனது முதல் தீர்ப்பில் (ஒக்ரோபர் 21-2020) முன்னராக தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.