முதன்முறையாக பாராளுமன்றத்துக்கு தெரிவான சி.வி.விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகி யோருக்கும் முன்வரிசையில் ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி நேற்று பாராளுமன்றத்தில் ஆட்சேபனை முன்வைத்தது.
பல வருடங்கள் பாராளுமன்றம் தெரிவான சிரேஷ்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பின்வரிசைகளில் இடம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் முதன்முறை தெரிவானவர்களுக்கு முன்வரிசை ஒதுக்கியது அநீதியானதென ஜக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார தெரிவித்தார். இது தொடர்பில் கட்சித் தலைவர் கூட்டத்தில் ஆராய்ந்து முடிவு செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன் போது ஒழுங்குப் பிரச்சினையொன்றை முன்வைத்த நளீன் பண்டார ஜயமஹ எம்.பி, 30 வருடங்களாக பாராளுமன்றம் தெரிவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கையில் முதன்முறையாக தெரிவான சிலருக்கு கட்சித் தலைவர்கள் என்று முன்வரிசை ஒதுக்கப்பட்டுள்ளது.
ஒரு கட்சி சார்பில் வந்த ஒரே ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்க்கு இவ்வாறு முன்வரிசை வழங்கினால் 40 தலைவர்கள் தெரிவானால் முன்வரிசையை புதிதாக அமைக்க நேரிடும்.இதனை மாற்ற வேண்டும் என்றார். ஆளும் தரப்பில் எஸ்.பி.திசாநாயக்க, அநுர யாப்பா ஆகியோருக்கும் பின்வரிசை ஒதுக்கப்பட்டுள்ளதென்றும் அதனையும் சீர்செய்ய வேண்டுமென்றும் அவர் தெரிவித்தார்.
எதிர்தரப்பு பிரதம கொரடா லக்ஷ்மன் கிரியெல்ல கூறுகையில், இது தொடர்பாக பாராளுமன்ற செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.கட்சித் தலைவர் கூட்டத்தில் இது பற்றி ஆராயப்படும் என்றார். இது தொடர்பாக கவனம் செலுத்துவதாக சபாநாயகர் அறிவித்தார்.
புதிய பாராளுமன்றத்திற்கு 15 கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர்.இதில் தமிழ் மக்கள் தேசிய முன்னணி தலைவர் சீ.வி.விக்கினேஸ்வரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம் ஆகியோருக்கு முன்வரிசை ஆசனங்கள் ஒதுக்கப்பட்டு
வழங்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,எதிர்க்கட்சி பிரதம கொரடா கிரியெல்ல,கட்சித் தலைவர்களான ஆர்.சம்பந்தன்,அநுர குமார திசாநாயக்க.ரவூப் ஹக்கீம்.ரிசாத் பதியுதீன்.செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கும் முன்வரிசை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.