முள்ளிவாய்க்காலில் மக்களை கொன்றது இலங்கை இராணுவமே? – விக்னேஸ்வரன்!

285

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயங்கரவாதிகள் அல்ல என்றும் அவர்கள் அனைவரும் அப்பாவி தமிழ் மக்கள் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, விடுதலைப் புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ள அவர், தங்கள் சமூகத்திற்கு அநீதி இழைத்ததால்தான் அவர்கள் ஆயுதம் ஏந்தி போராட தூண்டப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த நேர்காணல் பின்வருமாறு..

கேள்வி :- விடுதலைப் புலிகள் அமைப்பை எவ்வாறு பார்க்கிறீர்கள் என கேள்வி எழுப்பப்பட்டது?

பதில்:- விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் இல்லை ஆயுதம் ஏந்துவதற்கு இலங்கையின் ஆட்சியாளர்களே காரணம். இதற்கு விடுதலைப் புலிகளை குறை சொல்வதில் பயனில்லை.

கேள்வி :- உலக நாடுகள் விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக ஏற்றுக்கொள்கையில் நீங்கள் இதனை ஏன் பயங்கரவாத அமைப்பாக ஏற்றுக்கொள்ளவில்லை?

பதில் :- அரசாங்கம் தான் செய்யும் தவறுகளை மூடி மறைத்து, அது குறித்து கேள்வி எழுப்புகின்றவர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கிறது.

கேள்வி :- இராணுவத்தினர் விடுதலைப்புலிகள் உறுப்பினர்களைத் தவிர்த்து அப்பாவி மக்களை கொலை செய்தனரா?

பதில் :- 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயங்கரவாதிகள் அல்லர், அவர்கள் அனைவரும் அப்பாவி தமிழ் மக்கள்.
பொதுமக்களை கொலை செய்ய வேண்டிய அவசியம் விடுதலைப் புலிகளின் தலைவருக்கு இருக்கவில்லை. இராணுவமே அவர்களை கொலை செய்தது.

கேள்வி :- முள்ளிவாய்க்காலில் பயங்கரவாதிகள் மயானத்தில் ஏன் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டீர்கள்?

பதில் :- அந்த இடத்திற்குச் சென்று மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய கடமை உள்ளது அதனாலேயே நாம் அங்கு சென்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டோம்.

கேள்வி :- தமிழ் மொழியை இலங்கையின் முதன் மொழியாக கூறியமைக்கு ஆதாரம் உள்ளதா?

பதில் :- இலங்கை பண்டையகாலம் முதல் தமிழ் மக்களின் தாயகம் என்பதை உறுதிப்படுத்துவதற்கு என்னிடம் சாட்சியங்கள் இருக்கின்றன.

என்றும் சி.வி.விக்னேஸ்வரன் இந்த நேர்காணலில் மேலும் தெரிவித்துள்ளார்.