இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் கைதிகள் விடுவிப்பு
26-11-2023
0
45

இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 39 பாலஸ்தீனியர்களும் 24 பணயக் கைதிகளும் விடுவிக்கப் பட்டுள்ளனர். கடந்த ஒக்டோபர் 7-ம் திகதி தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீர் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதில் சுமார் 1,200 பேர் உயிரிழந்தனர். மேலும் 200-க்கும் மேற்பட்டோர் பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.
இதையடுத்து காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. 40 நாட்களுக்கும் மேலாக நீடித்த போரில் காசாவில் 14,000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர. சுமார் 6 ஆயிரம் பேரை காணவில்லை என்று காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கத்தார், அமெரிக்கா, எகிப்து ஆகிய நாடுகளின் மத்தியஸ்த முயற்சியால் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே 4 நாட்கள் தற்காலிக போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது.
இந்நிலையில் போர் நிறுத்த முதல் நாளான வெள்ளிக்கிழமை 24 பெண்கள், 15 சிறுவர்கள் என மொத்தம் 39 பேரை இஸ்ரேல் விடுவித்தது. இதற்கு ஈடாக 8 பெண்கள், 3 குழந்தைகள் உள்ளிட்ட 24 பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவித்தது. இந்த 24 பேரில் 13 இஸ்ரேலியர்கள் தவிர தாய்லாந்தை சேர்ந்த 10 பேர் மற்றும் பிலிப்பைன்ஸை சேர்ந்த ஒருவரும் அடங்குவர் என்று கத்தார் தெரிவித்துள்ளது.
காசாவில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் கிடைக்க இந்த போர் நிறுத்தம் வழிவகுத்துள்ளது. இந்நிலையில் இரண்டாவது கட்டமாக ஹமாஸ் 14 பணயக் கைதிகளையும் இஸ்ரேல் 42 சிறைக் கைதிகளையும் விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியானது.