சிங்கள மீனவர்களின் அத்துமீறல்களினால் வாழ்வாதாரத்தை இழக்கும் மீனவர்கள்

16-11-2023

0

21

முல்லைத்தீவு புலிபாய்ந்தகல், தண்ணிமுறிப்பு, கொக்குதொடுவாய் வடக்கு என  தொடர்ச்சியாக அத்துமீறி  சிங்கள மீனவர்கள் தொழிலில் ஈடுபட்டு வருகின்றமையினால் தமிழ் மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தை இழக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

 

முல்லைத்தீவு கொக்குதொடுவாய் வடக்கு 15ஆம் கட்டை பகுதியில் சிங்கள மீனவர்கள் அத்துமீறி  மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக வடக்கு மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். 

இதனால் குறித்த பகுதியில் மீன்பிடியில் ஈடுபடும் தமிழ் மீனவர்கள் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் வடக்கு மீனவர்கள் தெரிவிக்கின்றனர். 

புலிபாய்ந்தகல் பகுதியில் சிங்கள மீனவர்கள் அத்துமீறி வாடி அமைத்து தொழிலில் ஈடுபட்டிருந்த வேளையில் பிரதேச செயலகத்தினால் அறிவித்தல் வழங்கப்பட்டு வாடிகளை அகற்றுமாறு கோரி பதாகை காட்சிபடுத்தப்பட்டு இருந்தது. 

இந்நிலையில் கொக்குதொடுவாய் 15ஆம் கட்டை பகுதியில்  சிங்கள மீனவர்கள் வாடி அமைத்து சட்டவிரோத மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மீனவர் சங்கத்தினர், கிராம அமைப்புக்கள் இணைந்து சிங்கள  மீனவர்களிடம் பிரச்சினை தொடர்பாக கேட்டபோது, குறித்த இடத்தினை பிக்கு ஒருவர் தந்த இடமாகவும், தாம் அதனை வாங்கி விட்டதாகவும் அதனாலேயே இங்கே வாடி அமைத்து தொழில் செய்வதாகவும்  கூறியுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் முல்லைத்தீவு கடற்தொழில் திணைக்களத்திடம் குறித்த மக்கள் தெரியப்படுத்தியிருந்த வேளை அத்துமீறி தொழில் செய்யும் போது தமக்கு அறிவித்தல் வழங்குமாறும், தாம் உடனடியாக  அந்த இடத்திற்கு வருவதாகவும் கூறியிருந்தனர். 

ஆனால் இவ்விடயம் தொடர்பாக தொலைபேசியில் தகவல் வழங்கி இருந்தும் திணைக்களத்தினர் வருகை தரவில்லை எனவும் குறித்த பகுதி தமிழ் மீனவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.  அண்மைய காலங்களில் தொடர்ச்சியாக தமிழ் மீனவர்கள் தொழில் செய்து வரும் இடங்களை  சிங்கள மீனவர்கள் ஆக்கிரமித்து வருகின்றனர். முல்லைத்தீவு புலிபாய்ந்தகல், தண்ணிமுறிப்பு,கொக்குதொடுவாய் வடக்கு என இவ்வாறு தொடர்ச்சியாக அத்துமீறி பெரும்பான்மையின சிங்கள மீனவர்கள் தொழிலில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பில்,முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கருத்து தெரிவிக்கையில், சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்க தவறுவதனாலே தமிழர் பகுதிகளில் சிங்கள மக்கள் குடியேற முனைகின்றார்கள்.

சட்டவிரோத தொழில், குடியேற்ற முயற்சி ஊக்குவிப்பு நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டாம் என்பதை கேட்டு கொள்கிறேன். அத்துமீறிய சட்டவிரோத தொழில் நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என்பது தான் மக்களதும் எமது கோரிக்கையுமாக உள்ளது  என்றார்.