'கல்லறைகளை வழிபட வழிவிடு'- முல்லைத்தீவில் மக்கள் போராட்டம்

11-11-2023

0

19

முல்லைத்தீவு மாவட்டத்தின் தேராவில் மாவீரர் துயிலுமில்ல காணியை இராணுவத்திடமிருந்து விடுவிக்கக் கோரி, இன்று   இராணுவ முகாமுக்கு முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 

முல்லைத்தீவு மாவட்டத்தில் தேராவில் மாவீரர் துயிலும் இல்லக் காணியை இலங்கை இராணுவத்தின் 14 SLNG படைப்பிரிவு கையகப்படுத்தியுள்ளது. 

 

இந்நிலையில், மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு இடவசதியின்மை, தமது உறவுகளை புதைத்த இடத்தில் அஞ்சலி செலுத்த முடியாத நிலை மாவீரர்களின் உறவுகளுக்கு ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியும்,  மாவீரர் துயிலும் இல்லக் காணியில் இருந்து இராணுவத்தை வெளியேறுமாறு பல முறை அழுத்தம் கொடுத்தும் இதுவரை பயனில்லாத நிலையில் இராணுவத்தை வெளியேறுமாறு கோரியும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

 

இதன்போது, 'கல்லறைகளை வழிபட வழிவிடு', 'கல்லறைகள் மேலிருந்து இராணுவமே வெளியேறு', 'மிதிக்காதே மிதிக்காதே... புனிதர்களை மிதிக்காதே', 'அழவிடு அழவிடு... அம்மாக்களை அழவிடு', 'விளக்கேற்றுவோம் விளக்கேற்றுவோம்... பிள்ளைகளுக்கு விளக்கேற்றுவோம்', 'கல்லறைகளை அழிப்பதும் புத்தனின் போதனையா' போன்ற பல்வேறு வாசகங்கள் குறிப்பிடப்பட்டுள்ள பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்,

 

இதில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், முன்னாள் பிரதேச சபையின் தவிசாளர்கள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

 

தமிழர் தாயகப்பகுதியில் 2009ம் ஆண்டுக்கு முன் கிழக்கில் சில துயிலும் இல்லங்களை இலங்கை அரச படைகள் அழித்திருந்தனர். 2009ம் ஆண்டுக்குப் பின் வடக்கில் உள்ள அனைத்து துயிலும் இல்லங்களையும் அழித்துள்ளதோடு தமது படைத்தளங்களை அதன் மீது அமைத்துள்ளனர். இந்த சூழலில் தமிழ் மக்கள் பெரும் அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடந்த ஆண்டுகளில் அஞ்சலி நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர். மேலும் துயிலும் இல்லங்களில் இருந்து வெளியேறும் படி வலியுறுத்தியும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஆனால் குறித்த போராட்டங்கள்  மாவீரர் மாதத்தில் மட்டும் முன்னெடுக்கப்படுவதும் பின் அதை கிடப்பில் போடுவதுமாக இருக்காது எந்த போராட்டம் அனாலும் அது ஒரு கவனத்தைப் பெறும் நோக்கில்  முடிந்த வரையில் முன்னெடுப்பது காத்திரமானதாக இருக்கும் என்ற கருத்து முன் வைக்கப் பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.