கனடாவைப் போல் அமெரிக்காவும் இந்தியா மீது குற்றச் சாட்டு
01-12-2023
0
54

காலிஸ்தான் ஆதரவாளர் நிஜ்ஜார் கொலையில் இந்தியா மீது கனடா ஏற்கெனவே குற்றம் சாட்டியுள்ள நிலையில் அமெரிக்காவும் அதேபோன்ற குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது இந்தியாவின் வெளியுறவு விவகாரத்தில் நெருக்கடியை மேலும் அதிகரித்துள்ளது.
நியூயார்க்கில் வசித்து வரும் காலிஸ்தான் ஆதரவாளரை கொல்ல இந்தியர் ஒருவர் சதித்திட்டம் தீட்டியதாக அமெரிக்க குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
‘நீதிக்கான சீக்கியர்கள்' என்ற அமைப்பின் தலைவரான குர்பத்வந்த் சிங் பன்னுன், பல்வேறு பயங்கரவாத குற்றச்சாட்டுகளின் கீழ் இந்திய புலனாய்வு அமைப்புகளால் தேடப்பட்டு வருகிறார். அமெரிக்காமற்றும் கனடா ஆகிய இரட்டை குடியுரிமையை பெற்றுள்ள பன்னுன் தற்போது அமெரிக்காவில் நியூயார்க் நகரில் வசித்து வருகிறார். இவரை கொலை செய்ய சிலர் சதித் திட்டம் தீட்டியதாகவும், அது முறியடிக்கப்பட்டதாகவும் பைனான்சியல் டைம்ஸ் சில ஆதாரங்களை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டது.
இந்த நிலையில் நேற்று முன்தினம், அமெரிக்க பெடரல் வழக்கறிஞர்கள் மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் கூறுகையில், “இந்தியாவைச் சேர்ந்த நிகில் குப்தா என்பவர் இந்திய அரசு அதிகாரிகளுடன் இணைந்து பன்னுனை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளார். அந்த சதிச் செயல்அமெரிக்க அதிகாரிகளால் முறியடிக்கப்பட்டது என்றார்.
இந்த சூழ்நிலையில், அமெரிக்க மண்ணில் சீக்கியப் பிரிவினைவாதியை கொல்ல சதி செய்ததாக இந்திய நாட்டவர் மீது அமெரிக்க குற்றம் சாட்டியுள்ளது கவலைக்குரிய விஷயம் என இந்தியா தெரிவித்துள்ளதோடு இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.