காசாவில் 4 நாட்கள் போர் நிறுத்தம் அறிவிப்பு
22-11-2023
0
22

பணயக் கைதிகளை விடுவிக்க ஏதுவாக 4 நாட்களுக்கு போரை நிறுத்துவதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் இஸ்ரேல் மீது திடீர் ஏவுகணைத் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதலில் 1200 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் பணயக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். இதனையடுத்து இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 13 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரழந்துள்ளனர். இந்தப் போர் 40 நாட்களைக் கடந்து நடந்து வருகிறது.
இந்நிலையில் இஸ்ரேல் அரசு முதன்முறையாக காசாவில் 4 நாட்களுக்கு போர் நிறுத்தம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்தக் காலக்கட்டத்தில் குழந்தைகள், பெண்கள் உள்பட 50 பணயக் கைதிகளை ஹமாஸ் குழுவினர் விடுவிப்பார்கள் என்று இஸ்ரேல் அரசு அறிவித்துள்ளது.
இது பணயக் கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் மட்டுமே. முன்னதாக நேற்று, ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே (Ismail Haniyeh), "இஸ்ரேலுடனான போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது” என டெலிகிராமில் தெரிவித்திருந்தார். கத்தார் இருதரப்புகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், இரண்டு தரப்பிலும் சுமுக முடிவு விரையில் எட்டப்படலாம் என தகவல்கள் வெளியாகின. இஸ்ரேல் 5 நாள் போர் நிறுத்தமும், தெற்கு காசா உட்பட காசாவின் பகுதிகளில் தரைவழி மற்றும் வான்வழி தாக்குதலை நிறுத்தவும் அந்த பேச்சுவார்த்தையில் கேட்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.