நீங்கள் சொல்வதை செய்யும் தளபதி நான். நீங்கள் ஆணையிடுங்கள் -நடிகர் விஜய் கருத்து

02-11-2023

0

22

தளபதி என்பவர் மன்னர்கள் ஆணையிடுவதை அப்படியே செய்பவர்கள். மக்கள் நீங்கள் தான் மன்னர்கள். நீங்கள் சொல்வதை செய்யும் தளபதி நான். நீங்கள் ஆணையிடுங்கள் அதை செய்துவிட்டு போகிறேன் என நடிகர் விஜய் தெரிவித்தார்.

 

விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த மாதம் 17-ம் திகதி வெளியான லியோ திரைப்படம் ரூ. 540கோடிக்கும் அதிகமாக வசூலித்து வெற்றி நடைபோடுகிறது. இந்நிலையில் லியோ படத்தின் வெற்றி விழா கொண்டாட்டம் நேற்று சென்னை நேரு உள் விளையாட்டரங்கத்தில் நடைபெற்றது. இதில் விஜய், த்ரிஷா, லோகேஷ் கனகராஜ், அர்ஜுன், இயக்குனர் மிஷ்கின், மன்சூர் அலி கான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

இந்த விழாவில் நடிகர் விஜய் ‘நா ரெடி தான் வரவா’ பாடலை பாடி பேச்சை தொடங்கினார். அப்போது அவர்,

 

“என் நெஞ்சில் குடியிருக்கும்… என் அன்பான நண்பா… நண்பிகளே… இவ்வளவு நாளாக, நான் தான் உங்களை என் நெஞ்சில் குடி வைத்துள்ளேன் என்று நினைத்தேன். ஆனால் நீங்கள் தான் உங்கள் நெஞ்சில் என்னை குடி வைத்துள்ளீர்கள். குடியிருக்கும் கோயில்‌. உண்மையில் உணர்ந்துதான் சொல்கிறேன். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் நீங்கள் வைத்திருக்கும் அன்புக்கு நான் என்ன செய்ய முடியும்? உங்கள் காலுக்கு என்னை செருப்பாக தைத்து போட்டாலும் ஈடாகாது.

 

உங்களுக்கு நான் உண்மையாக இருப்பேன். கொஞ்ச நாளாகவே சமூக வலைதளங்களில் கோபம் எல்லாம் அதிகமாகவே உள்ளது. நாம் யார் மனதையும் புண்படுத்த வேண்டாம். நமக்கு நிறைய வேலை உள்ளது. வீட்டில் அப்பா அடித்தால் எங்கே போய் புலம்ப முடியும். இவ்வளவு கோபம் உடலுக்கு நல்லதுக்கில்லை. பெரிதும் பெரிது கேள். அப்பா மாதிரி ஆகனும் என்பது கனவு. பெரிதாக கனவு காணுங்கள் நண்பா. அதில் தவறு கிடையாது. லியோ பாடலில் 2 வரிகள் பிரச்னை. சிகரெட் என ஏன் நினைக்கிறீர்கள். பேனாவாக இருக்கலாம். மதுபானம் என ஏன் நினைக்கிறீர்கள். கூழாக இருக்கலாம். இப்படி எல்லாம் என்னால் சமாளிக்க முடியும். ஆனால் சினிமாவை சினிமாவாக பாருங்கள்.

 

மேலும் உலகம் முழுவதும் சினிமா மக்கள் விரும்பும் பொழுதுபோக்கு அம்சம். நல்லவன், கெட்டவன் என வேறுபடுத்தி காட்ட வெவ்வேறு காட்சிகள் வைக்க வேண்டும். எனக்கு கண்டிப்பாக தெரியும் அதை நீங்கள் பின்தொடர மாட்டீர்கள். நம் வாழ்க்கையில் பல்வேறு தீய விசயங்கள் இருக்கிறது. நல்லதை மட்டுமே தேர்வு செய்யுங்கள். பள்ளி கல்லூரி போகும் வழியில் கூட தான் டாஸ்மாக் இருக்கிறது. அங்கு ரவுண்டு அடிச்சிட்டா போறாங்க. கடந்து தானே போகிறார்கள்.

 

மக்கள் நீங்கள் தான் மன்னர்கள். நீங்கள் சொல்வதை செய்யும் தளபதி நான். நீங்கள் ஆணையிடுங்கள் அதை செய்துவிட்டு போகிறேன். கற்பனையாக ஒரு கட்சியில் இலாகா கொடுக்க வேண்டும் என்றால் போதைப்பொருள் தடுப்பில் ஒரு அமைச்சர் பதவி லோகேஷுக்கு கொடுக்கலாம். வெற்றி தோல்வி இருந்தாலும் தோல்வியை பற்றிதான் யோசிப்பேன். ” எனத் தெரிவித்தார்.